தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கஜா புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் தொடர்மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன.
புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களின் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
மழையின் தாக்கம் குறைந்தபோதும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் சரியான நிவாரணம் போய் சேரவில்லை என்று பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் புலம்பி வருகின்றனர். தமிழக அரசு ஒருபுறம் நிவாரணம் வழங்கிவந்தாலும், தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் முன்வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாகச் சென்று உதவிகள் வழங்கிவருகின்றனர்.
அந்த வகையில் நடிகர்களில் சூர்யா, விஜய், சிவகார்த்திகேயன், ஜிவி பிரகாஷ் போன்றவர்கள் டெல்டா மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினியின் மக்கள் மக்கள் மன்றம் மூலம் 50 லட்ச ரூபாய் நிவாரண பொருட்களை அளித்திருந்தார். ஆனால், அந்த நிவாரண பொருட்களில் ரஜினியின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
எந்த வித பலனையும் எதிர்பாராமல் பலரும் மக்களுக்கு உதவி செய்து வரும் இந்த தருணத்தில், அவசரமாக செய்ய வேண்டிய உதவியை இப்படி ஸ்டிக்கர் அடித்து கொள்ள நேரம் எடுத்துக்கொண்டு ரஜினி ரசிகர்கள் சிலர் செய்துள்ள இந்த உதவி வெறும் விளம்பரமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதே போல தமிழகத்திற்கு இதுவரை ஒரு சில அரசியல் கட்சிகள் தான் மக்களிடம் விளம்பரத்தை தேடுவதற்காக இலவச பொருட்களில் தங்கள் கட்சி தலைவரின் ஸ்டிக்கரை ஒட்டி விளம்பரம் தேடிக்கொண்டனர். ஆனால், ரஜினியும் இதே முறையை பின்பற்றுகிறாரா அல்லது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது ரஜினிக்கு தெரியாதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.