சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தை நேரில் சந்தித்து சூர்யா ஆறுதல் தெரிவித்து இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது தான் ஜெய் பீம் படம்.
இந்தப்படம் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அதோடு இந்தப் படத்தை குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள். அதனை தொடர்ந்து சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுபவர்களை சூர்யா வேட்டையாடும் சூரசம்ஹாரம் செய்வது தான் எதற்கும் துணிந்தவன்.
இதையும் பாருங்க : என் லவ்வர் என்ன அடச்சு வெச்சு இருக்காரா ? ஸ்ரீநிதி வீடியோவிற்கு பின் நக்ஷத்திரா வெளியிட்ட வீடியோ.
எதற்கும் துணிந்தவன்:
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் செம மாஸ் கமர்சியல் படமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் மட்டுமன்றி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதோடு இரண்டு வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து சூர்யா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சூர்யா – பாலா கூட்டணியில் படம் ஒன்று உருவாகி வருகிறது.
சூர்யா– பாலா கூட்டணி:
இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏற்கனவே பாலா இயக்கத்தில் சூர்யா அவர்கள் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்திருந்தார். பின் 20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா– பாலா இணைந்து படத்தில் பணியாற்றி வருவது ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை அளித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் சூர்யாவின் 41வது திரைப்படம் ஆகும். இதை அடுத்து சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார்.
விபத்தில் இறந்த சூர்யா ரசிகர்:
இந்நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தை நேரில் சந்தித்து சூர்யா ஆறுதல் கூறி இருக்கிறார். நாமக்கல் மாவட்டம் மேட்டு தெருவைச் சேர்ந்த 25 வயது உடையவர் ஜெகதீஸ். இவர் சூர்யாவின் தீவிர ரசிகர். அதோடு இவர் 15 ஆண்டுகளாக சூர்யா ரசிகர் மன்றத்தில் பணியாற்றியிருக்கிறார். இவருக்கு திருமணமாகி ராதிகா என்ற மனைவியும், இரண்டு வயதில் பெண் குழந்தையும் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி நாமக்கல் துறையூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் ஜெகதீஷ் சென்று கொண்டு இருந்தார். அப்போது நாமக்கல் காவல் நிலையம் அருகே சாலையின் வளைவில் திரும்பும்போது லாரி ஒன்று இவர் சென்ற இரு வாகனத்தின் மீது மோதியது.
ஆறுதல் சொல்லிய சூர்யா:
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெகதீஸை சேலத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருந்தார்கள். ஆனால், கொண்டு செல்லும் வழியிலேயே ஜெகதீஷ் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக நடிகர் சூர்யா வந்திருந்தார். மேலும், உயிரிழந்த ஜெகதீஷின் மனைவி ராதிகா மற்றும் அவரது உறவினர்களுக்கு கண் கலங்கியவாறு சூர்யா ஆறுதல் தெரிவித்து ஜெகதீசன் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி இருக்கிறார். அதோடு இந்த சாவு வீட்டில் ரசிகை ஒருவர் சிரித்துக்கொண்டே செல்பி எடுத்து இருக்கும் புகைப்படமும் சிக்கி இருக்கிறது.