காதல் கோட்டை கட்டியவர், வீட்டில் கழிவறை கட்டவில்லை - திருமணமான 30 நாட்களில் மனைவிக்கு நேர்ந்த சோகம்.
தமிழில் வெளியான ஜோக்கர் படத்தில் மனைவிக்கு ஒரு கழிவறை கட்டி தர வேண்டும் என்று கணவர் ஆசைப்படுவார். இறுதியில் கழிவறையிலேயே அவரின் மனைவி சுவர் விழந்து இறந்துவிடுவார். தற்போது இதே போல கழிவறை இல்லாத காரணத்தால் புதிதாக திருமணம் முடித்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சோகம் தமிழகத்தில் நடைபெற்று இருக்கிறது. கடலூர் மாவட்டம் அரிசிபெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ரங்கநாயுடு. இவருடைய மகள் ரம்யா. இவர் எம்எஸ்சி படித்து இருக்கிறார். பின் தன்னுடைய படிப்பை முடித்தவுடன் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரம்யா பணிபுரிந்து வந்தார்.
ரம்யாவும் கடலூர் புது நகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இவர்களுடைய காதல் வீட்டிற்கு தெரிய வந்தது. பின் கடந்த மாதம் 6 ஆம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் தன்னுடைய காதலி ரம்யாவை திருமணம் செய்து இருந்தார் கார்த்திகேயன். திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சென்றிருக்கிறார் ரம்யா. ஆனால், கார்த்திகேயன் வீட்டில் கழிவறை வசதி இல்லை.
கழிவறை பிரச்சனை:
மேலும், தன் கணவர் வீட்டிற்கு சென்ற பின்பு தான் அங்கு கழிவறை இல்லை என்பது ரம்யாவிற்கு தெரியவந்திருக்கிறது. இதனால் ரம்யா தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். கழிவறை வசதி செய்ய சொல்லி தன் கார்த்திகேயன் இடம் கேட்டு இருந்தார். அதனால் வேறு வீடு பார்த்த பிறகு அழைத்து செல்வதாக கார்த்திகேயன் கூறி இருந்தார். அதை ரம்யா நம்பி தன்னுடைய தாய் வீட்டில் இருந்தார். ஆனால் கார்த்திகேயன் வேறு வீடு பார்க்கவும் இல்லை, கழிவறை கட்டவும் இல்லை.
கணவன் - மனைவி சச்சரவு:
இந்த உண்மை ரம்யாவிற்கு தெரிந்தது. இது தொடர்பாக ரம்யா இறந்த அன்று கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. தன்னை உருகி உருகி காதலித்த கணவன் தனக்காக ஒரு கழிவறை கூட கட்டிக் தர முடியவில்லையே என்ற மனவேதனையில் ரம்யா இருந்தார். கழிவறை இல்லாத கணவன் வீட்டில் இனி எப்படி வாழ்வது? என்ற விரக்தி அடைந்த ரம்யா வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார்.
உயிரை மாய்த்த ரம்யா:
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரம்யாவின் தாய் மஞ்சுளா கத்தி அலரி இருக்கிறார். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ரம்யாவை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து இருந்தனர். பின் ரம்யாவிற்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் ரம்யாவிற்கு தீவிர சிகிச்சை அளித்து இருந்தனர். இருந்தும் சிகிச்சை பலனின்றி ரம்யா அநியாயமாக உயிரிழந்திருக்கிறார். இதனையடுத்து ரம்யாவின் தாய் மஞ்சுளா திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
ரம்யா தாய் போலீசில் புகார்:
மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ரம்யாவுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆவதால் அவரது சாவுக்கான காரணம் குறித்து கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசும் விசாரித்து வருகிறார்கள். கழிவறை இல்லாத காரணத்தினால் புது மணப் பெண்ணான ரம்யா உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.