தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த “படையப்பா” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், மணிவண்ணன், அப்பாஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து வசூல் சாதனை செய்தது. மேலும், இந்த படத்தில் நடிகர் செந்தில் அவர்கள் அழகேசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவருடைய காமெடி படத்தில் வேற லெவல்.
படையப்பா படம் வெளியாகி 21 வருடம் ஆகியுள்ளது. அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் பேவரைட் படங்களில் ஒன்றாக படையப்பா படமும் உள்ளது. படையப்பா படத்திற்கு பின்னர் பல படங்களில் செந்தில் நடித்து இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது அழகேசன் கதாபாத்திரம் தான். இந்நிலையில் செந்தில் அவர்கள் படையப்பா படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர் கூறியது, படையப்பா படம் வெளியாகி 21 வருடம் ஆகிவிட்டது. என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. வருஷங்கள் ரொம்ப வேகமாக போகிறது. நான் படையப்பா படத்திற்கு முன்பே ரஜினி சார் உடன் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் நடிக்க கேட்டவுடன் நான் ஓகே சொல்லிவிட்டேன். இந்த படத்தில் நான் ரஜினி சார் உடைய நண்பனாக அழகேசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பேன்.
இந்த படத்தில் குறிப்பாக சொல்லவேண்டுமானால் ‘மாப்பிள்ளை இவர் தான் ஆனா அவர் போட்டிருக்கும் சட்டை என்னது’ என்ற காமெடி ரொம்ப பிரபலமானது. இந்த காட்சி பெரிதாக இருக்கிறது குறைக்கலாம் என்று இயக்குனர் சொன்னார். ஆனால், ரஜினி சார் தான் இந்த சீனை குறைத்தால் காமெடி ஒர்க் அவுட் ஆகாது. இப்படி இருந்தால் தான் நல்லா இருக்கும் எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொன்னார். அவர் சொன்ன மாதிரியே இந்த காட்சி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது.
கரகாட்டக்காரன் வாழைப்பழம் காமெடியும் ஒரே வசனத்தை மறுபடி மறுபடி பேசியிருப்பெண். அது இன்னைக்கும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு தான் இருக்கிறது. அதே மாதிரி படையப்பா படத்தின் மாப்ள இவரு காமெடியும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு தான் இருக்கிறது. இந்த காட்சி வெளிவரும் போது தியேட்டரில் பயங்கர ரெஸ்பான்ஸ். படையப்பா மேன் ஆப் தி பவர் போல் இந்த அழகேசன் தான் மேன் ஆப் தி பியூட்டி என்று சொல்லி நிறைய வசனங்களும் பேசப்பட்டது.
இதுக்கெல்லாம் இயக்குனர் தான் காரணம். எல்லா கிரிடிட்டும் கே எஸ் ரவிக்குமாருக்கு தான் போய் சேரும். ரஜினி சார் ஸ்பாட்டுக்கு வந்தாலே போதும் பயங்கர கலகலப்பாக இருக்கும். சூட்டிங் போறதே தெரியாது செம ஜாலியாக இருக்கும். ரஜினி சார் அப்ப எப்படி இருந்தாரோ இப்பவும் அப்படி தான் இருக்கிறார். சினிமா உலகில் எப்போதும் ரஜினிக்கு மவுசு குறையவில்லை. அதை அப்படியே மெயின்டன் பண்ணிட்டு இருக்கார். இதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. என்றென்றும் ரஜினி தான் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் என்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.