தமிழ் சினிமாவில் பாண்டியராஜன் நடிப்பில் வெளியான ‘ஆண் பாவம்’ படத்தில் விகே ராமசாமிக்கு அம்மாவாக, பாண்டியராஜனுக்கு பாட்டியாக நடித்தவர் கொல்லங்குடி கருப்பாயி. மதுரை-தொண்டி சாலை, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பாயி. இவரை ஆண் பாவம் படத்தின் மூலம் பாண்டியராஜன் தான் அறிமுகப்படுத்தினார். நாட்டுப்புற பாடகியான இவர், கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண்ணிசைப் பாடல்களைப் பாடியிருக்கிறார்.
ஏழு வயதில் இருந்தே கழனிக்குப் போனாலும் வரப்புக்குப் போனாலும் பாடிக்கிட்டே இருப்பாராம். பின்னர் வயதுக்கு வந்த பின்னர் மாமனை திருமணம் செய்து கொண்டாராம். அதன் பின்னர் தான் இவர் பல்வேரு படங்களில் நடித்துள்ளார். ஆண் பாவம் படத்திற்கு பின் கோபாலா கோபாலா, ஆயிசு நூறு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
1993-ல் இவரது கலைச் சேவையை பாராட்டி முதல்வர் ஜெயலலிதா கலைமாமணி விருது வழங்கினார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இவரது பேட்டி ஒன்று வைரலானது. அதில், இடிந்துவிழும் நிலையில் உள்ள வீட்டில் வசிப்பதாகவும், அன்றாட வாழ்க்கையை சிரமத்துடன் நடத்துவதாகவும் தெரிவித்து இருந்தார். இவரது நிலையை அறிந்த விஷால், உடனே சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடியில் உள்ள நாட்டுப்புறப் பாடகி கருப்பாயிக்கு உதவித் தொகை வழங்கினர்.
இவருக்கு கணவர் பிள்ளைகள் யாரும் இல்லை, இதுகுறித்து பேசிய அவர், `ஆயுசு நூறு’ என்று படத்தில் நடித்து முடித்துவிட்டு வீடு திரும்பிய போது, ஆல் இந்தியா ரேடியோ அலுவலகத்தில் இருந்து எங்களை வரச்சொல்லி கடுதாசி மேலக் கடுதாசியா வந்தது. அங்கப் போகறவழியில விபத்து நடந்து என் கண்ணு முன்னாடியேப் போய்ச் சேர்ந்துட்டாரு. அவருக்கு அப்புறம் எம் வயித்துல பொறந்ததும் போய் சேர்ந்துருச்சு என்று கூறி இருந்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட விபத்தில் இவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இரவில் உணவு வாங்குவதற்காக சிவகங்கை சாலையை கடக்க முயன்றார். அப்போது அவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கொல்லங்குடி கருப்பாயிக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து காரைக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். கொரோனா கால கட்டம் என்பதால் இந்த விஷயம் பலருக்கும் தெரியவரவில்லை