கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ‘மஸ்தி குடி ‘ என்ற கன்னட படத்தின் படப்பிடிப்பில், இரண்டு ஸ்டண்ட் மாஸ்டர்கள் நீரில் மூழ்கி பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்த படத்தின் தயாரிப்பாளரை தேடி வந்த நிலையில், தற்போது அந்த படத்தின் நடிகர் துனியா விஜயை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னட நடிகர் துனியா விஜய் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான படம் ‘மஸ்தி குடி’. இந்த படத்திற்காக ஏரியில் ஒரு சண்டை கட்சி எடுக்கப்பட்ட போது, அனில் மற்றும் விஜய் என்ற இரு ஸ்டண்ட் மாஸ்டர்கள் பரிதாபமாக ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர். இது தொடர்பாக ‘மஸ்தி குடி’ படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் கௌடா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக சுந்தர் கௌடாவை கைது செய்ய அவரது வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். அப்போது அவரது வீட்டில் இருந்த நடிகர் துனியா விஜய் காவல்துறைனரை திசை திருப்பி சுந்தர் கௌடாவை தப்பிக்க வைத்துள்ளார். பின்னர் விஜயிடம் விசாரித்த போது சுந்தரை தான் பிடித்து கொடுப்பதாக போலீசிடம் தெரிவித்திருந்தார். பின்னர் துனியா விஜயும் தலைமறைவானார்.
இதனால் நடிகர் துனியா விஜய் மீது காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு மேல் தலைமறைவாக இருந்து வந்த துனியா விஜய் தமிழகத்தில் இருப்பதாக பெங்களூரு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து துனியா விஜயை தமிழகத்தில் தேடி வந்த பெங்களூரு காவல் துறை நேற்று (ஜூன் 8) இரவு கோவை அருகே துனியா விஜயை கைது செய்துள்ளது.