நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம்வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா, தனது மருத்துவர் கனவு பொய்யானதால் உயிரை மாய்த்துக்கொண்டார். இதனால், தமிழக மாணவர்கள் நீட்டுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்றும் கூறி வருகின்றனர்.
திரைத்துறையைச் சேர்ந்த பலரும் அனிதாவுக்கு நினைவேந்தல் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் அனிதாவின் மரணத்துக்கு நீதிகேட்டும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்களுக்குத் தங்களது ஆதரவையும் அளித்து வந்தனர். அனிதாவின் இறுதிச் சடங்கில் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். இயக்குநர் பா.ரஞ்சித் அனிதா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் தொடர்ச்சியாக இன்று நடிகர் விஜய் அனிதாவின் குடும்பத்தை அவர்களது இல்லத்தில் சந்தித்து ஆறுதல் வார்த்தைகளைக் கூறியுள்ளார்.