தென்னிந்திய சினிமா உலகில் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகராக திகழ்ந்தவர் ஏ.எல்.ராகவன். இவர் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். ஏ.எல்.ராகவன் தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்டவர். சிறு வயதில் இருந்தே இவர் மேடை நாடகங்களில் நடித்தவர். பிறகு பின்னணிப் பாடகராக சினிமாவில் பாடத் தொடங்கினார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிற மொழி படங்களிலும் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். எங்கிருந்தாலும் வாழ்க போன்ற இவரது சில பாடல்கள் காலங்கடந்தும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.
டி.எம்.சௌந்தர்ராஜன் இசையில் நிறைய பாடல்களைப் பாடியுள்ளார். இவர் திரைப்படப் பின்னணிப் பாடகர் மட்டும் இல்லாமல் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். மேலும், இவர் சினிமாவிலிருந்து ஒதுங்கிய பிறகும் கூட இசைக் கச்சேரிகள் நடத்திக் கொண்டு இருந்தார். இவர் தமிழ் சினிமா உலகில் பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்தைத் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள்.
கடந்த மாதம் மே 2-ம் தேதி இவர்களுக்கு 60-வது திருமண நாள். லாக்டவுன் காரணமாக இவர்கள் வீட்டிலேயே எளிமையாகக் கொண்டாடியிருக்கிறார்கள். இந்நிலையில் பின்னணிப் பாடகரும், நடிகை எம்.என்.ராஜத்தின் கணவருமான ஏ.எல்.ராகவன் அவர்கள் திடீரென்று மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். தற்போது அவருக்கு வயது 86. ஏ.எல்.ராகவன் அவர்கள் தன் மனைவி உடன் சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்தார். இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு பரிசோதனை செய்தபோது இருவருக்குமே கோவிட் -19 இருந்தது உறுதியானது. இருவருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் ஏ.எல்.ராகவனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து நேற்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் திரையுலகினர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும், பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.