கடந்த சில தினங்களாக நடிகர் அஜித் அதை செய்தார், இதை செய்தார் என்று பல செய்திகள் சமூக வலைதளத்தில் வைரலானது.அவ்வளவு ஏன் சம்பீத்தில் இறந்த வடிவேல் பாலாஜி குடும்பத்தினருக்கு கூட அஜித் உதவி செய்ததாக சில யூடுயூப் ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. இப்படி ஒரு நிலையில் நடிகர் அஜித் சார்பாக அவரது சட்ட ஆலோசகர் சட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நான் திரு அஜித் குமார் அவர்களின் அதிகாரபூர்வ சட்ட ஆலோசகர். இந்த அறிக்கை நாங்கள் எங்கள் கட்சிக்காரர் திரு அஜித் குமார் சார்பாக கொடுக்கும் சட்டஅறிக்கை ஆகும். சமீபகாலமாக ஒரு சில தனிநபர்கள் பொதுவெளியில் என் கட்சிக்காரர் சார்பாகவோ அல்லது அவரது பிரதிநிதி போலவோ என் கட்சிக்காரர் அனுமதியின்றி தங்களை முன்னிலைப்படுத்தி வருவதாக சில சம்பவங்கள் என் கட்சிக்காரர் கவனத்துக்கு வந்து உள்ளது.
இதை முன்னிட்டு என் கட்சிக்காரர் தன்னுடன் பல வருடங்களாக பணியாற்றி வரும் அவரது மேலாளர் திரு சுரேஷ் சந்திரா மட்டுமே தன்னுடைய அனுமதி பெற்ற தன் பிரதிநிதி என்றும், அவர் மட்டும் தன்னுடைய சமூக மற்றும் தொழில் ரீதியான நிர்வாகி என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார். மேலும் தன்னுடைய பெயரை பயன்படுத்தி எந்த ஒரு தனிநபரோ, நிறுவனமோ யாரையேனும் அணுகினால் அந்த தகவலை திரு சுரேஷ் சந்திரா அவர்களிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார்.
இதை மீறி இத்தகைய நபர்களிடம் தன் சம்பந்தமாக யாரும் தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக தொடர்பில் இருந்தால், அதனால் ஏதேனும் பாதகம் ஏற்பட்டால் அதற்கு என் கட்சிக்காரர் எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை என்றும் அறிவிப்பதோடு பொது மக்களும் இத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.