மேடைக்கு கீழ் அவர் அப்படி பேசியதால் தான் நான் விருதை வாங்கியதும் தமிழில் பேசினேன் - முதன் முறையாக சொன்ன ஆஸ்கர் நாயகன்.

By Rajkumar · 12/3/2023

ஆஸ்கார் மேடையில் தமிழில் பேசியதற்கான காரணம் குறித்து ஏ ஆர் ரகுமான் பகிர்ந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர். இதனால் இவர் பல கச்சேரிகளில் பாடி இருக்கிறார். பின் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார் ரகுமான் . இவர் தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார்.

அதன் பின் இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் இசையமைத்து கொடுத்திருக்கிறார். மேலும், மேற்கத்திய இசையை பாமர மக்களுக்கு கொண்டு சென்றவர். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். மேலும், இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தமிழ் மீது தீராத காதல், அன்பும் கொண்டவர். சர்வதேச அளவில் திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை அதுவும் இரண்டு விருதுகளை வென்று உலக அரங்கில் தமிழை தலைநிமிரச் செய்தவர்

இப்படி குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார் ரகுமான். இந்நிலையில் ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசியதற்கான காரணம் குறித்து ஏ ஆர் ரகுமான் பகிர்ந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. 2009 ஆம் ஆண்டு ஏ ஆர் ரகுமான் அவர்கள் ஆஸ்கர் விருது வென்றது அனைவரும் அறிந்த ஒன்றே. விழா மேடையில் ஏ ஆர் ரகுமான் எல்லா புகழும் இறைவனுக்கே என்று தமிழில் பேசி இருந்தார். ஸ்லம்டாக் மில்லினியனர் படத்திற்காக சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த பாடல் ஆகிய இரண்டு பிரிவுகளில் ஏ ஆர் ரகுமான் ஆஸ்கர் விருதுகளை வாங்கி இருந்தார்.

அது மட்டுமில்லாமல் ஆஸ்கர் வென்ற முதல் தமிழர் என்ற பெருமையும் ஏ ஆர் ரகுமானை சேரும். இந்த நிலையில் விருது பெற்ற அனுபவம் குறித்தும், மேடையில் தமிழில் பேசியது குறித்தும் மனம் திறந்து ஏ ஆர் ரகுமான் கூறியிருக்கிறார். அதில் அவர், பின்னணி இசை விருதுக்காக என்னுடைய பெயர் அறிவித்தபோது இது கனவா? நிஜமா? என்று நான் நினைத்தேன். மொத்த இந்தியாவும் ஆர்ப்பரித்தது. நான் ஒரு க்ளேடியேட்டரை போல தான் உணர்ந்தேன். மேடையில் பேசுவதற்கு கூட ஏதும் தயாரித்து வைக்கவில்லை. இயல்பாக தான் என்ன தோன்றியதோ அதை நான் பேசினேன்.

நான் கீழே அமர்ந்து கொண்டிருந்தபோது பெனோலோபி க்ருஷ் ஸ்பானிஷ் மொழியில் பேசி இருந்தார். ஓ இது நன்றாக உள்ளது. நாமும் தமிழிலேயே பேசிவிடலாம் என நினைத்து மேடையில் எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் கூறினேன். நான் சொன்ன இந்த வார்த்தைகள் புனித நூலில் இருந்து எடுக்கப்பட்டவை. கடவுள் அனைவருக்கும் பொதுவானது என்று அர்த்தம். இதனை அடுத்து இரண்டாவது முறையாக சிறந்த பாடல்கான விருது அறிவிக்கப்பட்டபோது ஸ்லம்டாக் மில்லினியனர் படம் குறித்து சொல்லியிருந்தேன். இந்த படம் வாழ்வில் நம்பிக்கையின் சக்தியை உணர்த்துவது.

நல்லதொரு எதிர்காலம் மற்றும் நம்பிக்கை குறித்து இந்த படம் பேசுகிறது என்று சொன்னேன். ஏன்னா, அந்த சமயம் உலகம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது. ஸ்லம்டாக் மில்லினியனரும் அதை ஒட்டி தான் வெளியாகி இருந்தது. அது மட்டும் இல்லாமல் என் வாழ்வில் எனக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தது. ஒன்று வெறுப்பு, மற்றொன்று அன்பு. நான் அன்பை தேர்ந்தெடுத்தேன். அதனால் தான் நான் இங்கு நிற்கிறேன். கடவுள் அருள் புரியட்டும் என்று கூறியிருந்தேன். சிலர் இதை தவறாக புரிந்து கொண்டனர். மதத்தை ஒப்பிட்டு எல்லாம் பேசி இருந்தார்கள் என்று பல விஷயங்களை கூறியிருந்தார்.

behindtalkies AMP · Quick view
View full