‘தி கேரளா ஸ்டோரி’ இயக்குனரின் புதிய படத்தில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான் - பின்னணி என்ன ?

By Arun · 12/6/2023

தி கேரளா ஸ்டோரி பட இயக்குனருடன் ஏ ஆர் ரகுமான் கை கோர்த்து இருக்கும் தகவல் வெளியானது தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து கண்டனம் தெரிவிக்கும் பதிவுகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து இருக்கும் படம் தி கேரளா ஸ்டோரி. இந்த படத்தில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, ஷர்மா, இத்தானி உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். இந்த படத்தை விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்து இருக்கிறார்.

இந்த படம் இந்தியில் உருவாகி பேன் இந்திய படமாக வெளியாகி இருக்கிறது. படத்தில் கேரளாவில் அல்லா தான் உலகத்திலேயே உயர்ந்த கடவுள் என்றும் ஹிஜாப் அணிந்து கொண்டால் யாரும் பாலியல் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்றும் கல்லூரி ஹாஸ்டலில் இருக்கும் இந்து-கிறிஸ்தவ மாணவிகளை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றுகிறார்கள். பின் அவர்களை இஸ்லாமிய இளைஞர்கள் மூலம் காதலிக்க வைத்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

தி கேரளா ஸ்டோரி படம்:

திருமணம் செய்து கொண்ட பிறகு அந்த பெண்களை சிரியா, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு அவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளாவும், பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்துகிறார்கள். இறுதியில் அவர்கள் மதவெறியில் இருந்து விடுவிக்கப்பட்டார்களா? அந்த பெண்களுக்கு விடுதலை கிடைத்ததா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படம் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக பல எதிர்ப்புகள் நிலவியது. அதோடு இது இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

படம் குறித்த சர்ச்சை:

மேலும், இந்த படம் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேரளா மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தார்கள். ஆனால், விதிக்கப்பட்ட தடைகள் எல்லாம் மீறி இந்த படம் வெளியாகியிருந்தது. அதோடு இந்த படத்திற்கு பல எதிர்ப்புகள் வந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் என பலரும் படத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள். இருப்பினும் பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவிலும் இந்தப் படம் நாடு முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது.

30 கோடி பொருட் செலவில் உருவான இந்தப் படம் இந்திய அளவில் இதுவரை ரூ.200 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து இயக்குநர் சுதிப்தோ சென் அடுத்ததாக இந்தியாவில் 50 ஆண்டுகளாக இயங்கிவரும் மாவோயிஸ்டகள் பற்றி படம் இயக்கவிருப்பதாக தெரிவித்தார். இந்தப் படத்தையும் தி கேரளா ஸ்டோரி விபுல் ஷா தயாரிக்க இருக்கிறார். சஹாரா இந்தியா பர்வார் நிறுவனத்தை உருவாக்கிய சுப்ரதா ராயின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் உருவாக இருக்கிறது.

இந்த படத்திற்கு ‘சஹாராஸ்ரீ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தி கேரளா ஸ்டோரி படம் குறித்து குறித்து ஏ ஆர் ரகுமான் மறைமுகமாக தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அதே இயக்குரனின் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை இசையமைப்பதாக அறிவிப்பு வெளியாகியிருப்பது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

இதற்கு பலர், மதவெறியை தூண்டும் இயக்குனருடன் ஏ ஆர் ரகுமான் கைகோர்க்கலாமா? ரகுமானுக்கு பணம் தான் ஒரே நோக்கமா? என்றும் கடுமையாக விமர்சித்து எதிர்ப்பு கூறி வருகிறார்கள். ஆனால், இன்னொரு பக்கம், இந்த படம் ஒன்றரை வருடங்களுக்கு முன்பே ஒப்புக்கொண்டு விட்டதாக ரகுமான் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். ஆகவே, ரசிகர்கள் இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் பணியாற்ற வேண்டாம், கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு ஏ ஆர் ரகுமான் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full