கல்லூரி படிக்கும் மாணவன் மணிகண்டன் மறைவுக்கு திமுக தான் காரணம் என்று குற்றம் சாட்டி இருக்கிறார் bjp கட்சியை சார்ந்த பிரபல நடிகை. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் அருகே நீர்க்கோழியேந்தல் கிராமத்தை சேர்ந்த மாணவன் மணிகண்டன். சில தினங்களுக்கு முன் போலீசார் நடத்திய வாகன சோதனையில் அவ்வழியாக வந்த கல்லூரி மாணவன் மணிகண்டன் நிற்காமல் சென்றதால் ஆத்திரம் அடைந்த போலீசார் அவரை பின்தொடர்ந்து சென்று பிடித்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதை அடுத்து போலீஸ் விசாரணைக்கு பிறகு மணிகண்டன் வீடு திரும்பி இருக்கிறார். பின் வீட்டில் மர்மமான முறையில் அதிகாலையில் வாயில் நுரை தள்ளி இறந்துள்ளார். இதையடுத்து போலீசார் அடித்து கொலை செய்ததாக மணிகண்டன் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், போலீஸ் தரப்பிலிருந்து பாம்பு கடித்து தான் மணிகண்டன் இறந்ததாக விளக்கமளித்த நிலையில் உறவினர்கள் அதை ஏற்கமுடியாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதனையடுத்து முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை முன்பு மணிகண்டன் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டார்கள். மேலும், மணிகண்டன் உடலில் பிரேத பரிசோதனை நடைபெற்றது. பின் உணவுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு அல்லது அல்சர் இருந்த காரணத்தால் மணிகண்டன் இறந்து இருக்கலாம் என்று மாவட்ட எஸ்பி தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை மகன் இருவர் போலீசரால் கைது செய்யப்பட்டு பின்னர் அவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இப்படி ஒரு நிலையில் மணிகண்டன் இறப்பும் லாக்கப் மரணம் தான் என்று பலரும் சமூக வலைதளத்தில் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் அவர்கள் மணிகண்டனின் இறப்பிற்கு திமுகதான் காரணம் என்று குற்றம் சாட்டி இருக்கிறார். இது குறித்து அவர் டுவிட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, போலீஸ் காவலில் மாணவர்களோ, சாதாரண மனிதர்களோ இருந்தால் பெரிய பிரச்சனையை உருவாக்கி எதிர்க்கட்சி மீது பழி சுமத்துவார்கள். ஆனால், இன்று திமுக ஆட்சியில் போலீஸ் காவலிலிருந்த மணிகண்டன் மரணத்தை மூடி மறைக்க முயல்கிறது.
அனைத்து போராளிகளும் திமுகவுக்கு ஆதரவாக அமைதியாக இருக்கிறார்கள். பொது மக்களுக்கு சமூக நீதி வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டனுக்கு நீதி வேண்டும். அவரது குடும்பத்திற்கு திமுக 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று பதிவிட்டிருக்கிறார். தற்போது இந்த டிவிட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.