பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல் இருப்பது சரவணன் தான். தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவரான சரவணன் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார். ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் இவரை சித்தப்பு என்று அழைத்து மிகுந்த மரியாதையையும் வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீரா மிதுன் குறித்து பேசிய கமல், பேருந்துகளில் பெண்களை உரசுவதற்கு என்றே சிலர் வருவார்கள் என்று கூறினார். இதற்கு சரவணன் ‘நானும் காலேஜ் படிக்கும் பொது செஞ்சி இருக்கேன் சார்’ என்று கூறினார். பல கோடி பேர் பார்க்கும் ஒரு பொது நிகழ்ச்சியில் பெண்களை குறித்து இப்படி பேசியதால் சரவணன் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
இதனால் மன்னிப்பு கேட்ட சரவணன், நான் கல்லூரி படிக்கும் போது உண்மையாக பெண்களை பேருந்தில் உரசியுள்ளேன். ஆனால், அது தவறு என்பதை பின்னர் உணர்ந்து என்னை போல யாரும் செய்ய வேண்டாம் என்று தான் கூற முயன்றேன். ஆனால், நான் சொல்ல வந்த கருத்தை முழுமையாக சொல்ல முடியாமல் போனது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழுவில் பரிந்துரைத்தபடி, இயல், இசை, நாட்டியம், நாடகம், கிராமியம், திரைத்துறை மற்றும் சின்னத்திரை போன்ற பல்வேறு கலைப்பிரிவுகளில் புகழ்பெற்ற, திறமைமிக்க 201 கலை வித்தகர்களுக்கு மாநில அளவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான “கலைமாமணி” விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது அதில் சரவணனின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபு தேவா, பிரசன்னா, பொன்வண்ணன், சந்தானம், சூரி, பி.ராஜசேகர், ஆர்.பாண்டியராஜன், சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, கானா உலகநாதன், கானா பாலா, நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் ஆகியோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நடிகைகள் குட்டி பத்மினி, ப்ரியா ஆனந்த், பிரியா மணி, பி.ஆர் வரலட்சுமி, குமரி காஞ்சனா தேவி, நளினி ஆகியோருடன் யுவன் சங்கர் ராஜா, உன்னி மேனன், நிர்மலா பெரியசாமி, பரவை முனியம்மா, ஃப்லிம் நியூஸ் ஆனந்தன் போன்ற 201 பிரபலங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.