நான் மதம் பரப்ப இங்கு வரவில்லை, இதற்காக தான் செய்கிறேன்- மனம் உருகி பேசிய டி.இமான்

By subhashini · 25/9/2023

நரிக்குறவர் குடும்பங்களுக்கு இசையமைப்பாளர் டி இமான் செய்திருக்கும் உதவி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இசை அமைப்பாளராக திகழ்பவர் டி.இமான். இவர் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வெளியாகி இருக்கிறது. விஜய் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற தமிழன் படத்தின் மூலம் தான் இமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால், இதற்கு முன்பு இவர் தில்ரூபா என்ற படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

முதல் படத்திலேயே இவர் இசைத்த அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானது. அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். அதிலும் அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் படத்தில் இவருடைய பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி இருந்தது. தற்போது இவர் படங்களில் பிசியாக பணியாற்றி வருகிறார். அதோடு கிராம கதையம்சம் கொண்ட கதைக்கு தான் இவர் அதிகம் இசை அமைத்து இருக்கிறார்.

இமான் செய்த உதவிகள்:

இது ஒரு பக்கம் இருக்க, சமீபகாலமாகவே இமான் அவர்கள் தன்னுடைய இசையில் பல மாற்றுத் திறனாளிகளுக்கு பாட வாய்ப்பளித்திருப்பது அனைவரும் அறிந்ததே. முதன் முதலில் இவர் மாற்றுத்திறனாளி திருமூர்த்திக்கு தான் வாய்ப்பு அளித்திருந்தார். அவரைத் தொடர்ந்து வைக்கோம் விஜயலட்சுமியை பாட வைத்தார். தற்போது இவர் மாற்றி திறனாளி சிறுமி சகானாவிற்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பிரபலங்கள் பலரும் இமானை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார்கள்.

நரிக்குறவர் குடும்பங்கள்:

இந்த நிலையில் நரிக்குறவர் குடும்பங்களுக்கு இசையமைப்பாளர் டி இமான் செய்திருக்கும் உதவிதான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகே உள்ள பெரியாக்குறிச்சி என்ற பகுதியில் பல ஆண்டுகளாக முப்பதுக்கு மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்கி உள்ள வீடுகள் அனைத்துமே சேதம் அடைந்து மோசமான நிலைமையில் இருக்கிறது. சமூக ஆர்வலரான செல்வம் உமா இதை இசையமைப்பாளர் இமானிடம் கூறியிருக்கிறார்.

நரிக்குறவர் மக்களுக்கு செய்த உதவி:

இதனை அடுத்து இசையமைப்பாளர் இமான் அவர்களும் இரண்டு லட்சம் மதிப்பீட்டில் அப்பகுதியில் உள்ள ஆறு குடும்பங்களுக்கு குடிசை வீடுகள் சீரமைத்தும், மூன்று வீடுகளுக்கு தார்பாய்கள் மற்றும் மாணவர்களுக்கு இரவு நேர பாடசாலை அமைத்து நோட்டு புத்தகங்கள் வழங்கி இருக்கிறார். மேலும், இமான் தன்னுடைய மனைவியுடன் அப்பகுதி மக்களை சந்திக்க நேரில் சென்று இருக்கிறார். அப்போது அந்தப் பகுதி நரிக்குறவர் இன மக்கள் இமானிற்கு மணி மாலைகளை அணிவித்து தங்களுடைய மரியாதையை செலுத்தி இருக்கிறார்கள். பின் அந்த பகுதி மக்கள் இமானுடன் செல்பி எடுத்து இருக்கின்றனர்.

https://www.youtube.com/watch?v=_INPxvI22L0

இமான் அளித்த பேட்டி:

அதன் பிறகு இமான் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், நான் ஒரு சமூக ஆர்வலராக தான் இந்த பகுதிக்கு வந்தேன். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. டி இமான் என்ற பெயரில் நான் தொண்டு அறக்கட்டளையை கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். அதன் மூலம் தான் எனக்கு இப்பகுதி மக்களின் வீடு சேதம் அடைந்திருப்பதை அறிந்தேன். பின் குடிசை வீடுகள் மற்றும் பாடசாலைகளை அமைத்து தந்திருக்கிறேன். தற்போது நான் இசைத்துறையில் நல்ல இடத்தில் இருக்கிறேன். இது எனக்கு கடவுள் கொடுத்த பிச்சை. நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவன் என்பதால் மதம் பரப்புவதற்காக எல்லாம் இங்கு வரவில்லை. நான் சம்பாதித்த பத்தில் ஒரு பங்கு இறைப்பணிக்காக எடுத்து செலவு செய்து வருகிறேன். இந்த பணிகள் எல்லாம் நான் இறைப்பணியாக தான் பார்க்கிறேன். ஜாதி, மதம், இனம், வேறுபாடு இல்லாமல் நான் இந்த சமூக சேவையை தொடர்ந்து செய்வேன் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full