நடிகர் விக்ரமின் மகன் துருவ் தன் முதல் பட சம்பளத்தைக் கேரள வெள்ளத்துக்கு அளித்துள்ளார்.தெலுங்கில் விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே நடித்து மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் அர்ஜுன் ரெட்டி.
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் கோடிகளைச் சம்பாதித்தது. இதனால் தெலுங்கைத் தாண்டி மற்ற மொழிகளிலும் இப்படம் பேசும்பொருளாக அமைந்தது. இதனால் இப்படம் தமிழில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது. `வர்மா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் பாலா, தமிழில் ரீமேக் செய்கிறார். இந்தப் படத்தின் மூலம் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகிறார். நேற்று துருவ் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
ரசிகர்கள் மத்தியில் டீசர் வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், துருவ் விக்ரமின் தோற்றமும் பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையே, வர்மா படத்தில் நடித்ததற்காக தான் பெற்ற முதல் சம்பளத்தைக் கேரள வெள்ளத்துக்கு அளித்துள்ளார் துருவ்.
சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாகத் தன் முதல் பட சம்பளத்தைத் தயாரிப்பாளர் முகேஷுடன் சென்று கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து அவர் அளித்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் துருவ்வின் நடவடிக்கையைப் பாராட்டி வருகின்றனர்.