ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்போட்டிக்கு ‘ஜெய் பீம்’ படம் தகுதி பெரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக செய்தி வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.
மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டு மழையை குவித்தது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது தான் ஜெய் பீம் படம். மேலும், படத்தில் சந்துரு கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக சூர்யா நடித்து இருந்தார். பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே பழங்குடியின மக்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்து இருந்தது.
ஐஎம்டிபி தளத்தில் அதிக ரேட்டிங் பெற்ற படம் :
இந்தப்படம் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதோடு இந்தப் படத்தை குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள். அதேசமயம் இந்த படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக வன்னிய சமூகத்தினர் பல சர்ச்சைகளை கிளப்பி இருந்தார்கள். இருந்தாலும், திரைப்படங்களுக்கான ரேட்டிங் குறித்து கணக்கிடும் ஐஎம்டிபி தளத்தில் அதிக ரேட்டிங் பெற்ற ‘ஷஷாங் ரிடெம்ப்ஷன்’ திரைப்படத்தை முந்தி ‘ஜெய்பீம்’ சாதனை படைத்தது.
ஆஸ்கர் யூடுயூப் பக்கத்தில் இடம்பெற்ற ஜெய் பீம் :
மேலும் ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையாக கருதப்படும் கோல்டன் க்ளோப் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றிருந்தது. தற்போது 94வது ஆஸ்கர் விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் அனுப்பப்பட்ட 276 படங்களில் ஜெய்பீம் தேர்வாகியுள்ளது. அதோடு ஆஸ்கரின் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் ஜெய்பீம் திரைப்படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் ஆஸ்கரின் யூட்யூப் தளத்தில் பதிவேற்றம் செய்த முதல் தமிழ் திரைப்படம் ஜெய்பீம் என்பது குறிபிடத்தக்கது.
பெரிதும் எதிர்பார்த்த ரசிகர்கள் :
ஆஸ்கர் கமிட்டி சார்பில் இன்று ட்விட்டர் ஸ்பேசஸ் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கலந்துரையாடலை ராட்டன் டொமேட்டோஸ் ஆசிரியர்களில் ஒருவரான ஜாக்குலின் கோலே தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தனது ட்வீட்டில் ஆசிரியர் ஜாக்குலின் கோலேவிடம், நாளை காலை எந்த ஆஸ்கர் பரிந்துரை உங்களிடம் மிகப்பெரிய ரியாக்ஷனை ஏற்படுத்தும்? என்று கேட்டிருந்தார்.
இறுதிப்பட்டியலில் இடம்பெறாத ஜெய் பீம் :
அதற்கு ஜாக்குலின் கோலே கூறி இருப்பது, சிறந்த படத்துக்கான பரிந்துரையில் ஜெய்பீம் – என்னை நம்புங்கள் என்று கூறி இருக்கிறார். இதனால் ஜெய் பீம் எப்படியும் சிறந்த படத்திற்கான இறுதிப் பட்டியலில் இடம்பெறும் என்று பலரும் கூறி வந்தனர். இந்நிலையில், இன்று வெளியாக இறுதிப் பட்டியலில் ஜெய் பீம் இடம்பெறவில்லை. Belfast, CODA, Don’t Look Up, Drive My Car, Dune, King Richard, Licorice Pizza, Nightmare Alley, The Power of the Dog, West Side Story ஆகிய படங்கள் சிறந்த படத்திற்கான இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.