உலகநாயகன் நடிகர் கமல் தற்போது தனது ” மக்கள் நீதி மய்யத்தின்” கட்சி பணிகள், பிக் பாஸ் நிகழ்ச்சி என்று படு பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டினுள் மர்ம நபர் ஒருவர் சுவரேறி நுழைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் நடிகர் கமல்ஹாசன் வீடு உள்ளது. இந்த வீடு, மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகமாகச் செயல்படுகிறது. இதனால், எப்போதும் போலீஸார் அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதைத் தவிர தனியார் காவலாளிகளும் அங்கு உள்ளனர்.
இந்நிலையில் , இன்று(ஜூன் 30) ஒரு நபர், கமல் கட்சி அலுவகத்தில் உள்ள சுற்றுச்சுவரில் ஏறிக் குதித்தத்துடன் அலுவலகத்துக்குள்ளும் செல்ல முயன்றுள்ளார். இதைப்பார்த்த காவலாளிகள் அவரை மடக்கிப் பிடிக்க முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க அந்த நபர் முயற்சி செய்தார். இருப்பினும் காவலாளிகளிடம் அவர் சிக்கிக் கொண்டார்.
இதை தொடர்ந்து தேனாம்பேட்டை போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீஸாரிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் , அவர் பெயர் சபரிநாதன் என்றும், அவர் கமல் வீட்டில் திருடத்தான் சென்றுள்ளார். ஆனால், அது கமல் வீடு என்று அவருக்கு தெரியாது என்றும் ‘ பிடிபட்ட நபர் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.