திருவனந்தபுரத்தில் நடந்த சாலை விபத்தில் மலையாள திரையுலகின் பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான பாலாபாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் சிக்கினர். இந்த விபத்தில் அவரின் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான பாலாபாஸ்கர் திருச்சூரில் உள்ள கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.
தரிசனம் முடிந்த பின்னர் தன் காரில் திருவனந்தபுரம் நோக்கி திரும்பிக்கொண்டிருந்தார். அவரின் ஓட்டுநர் காரை ஓட்டி வந்துள்ளார். காரில் பாலாபாஸ்கர் அவரின் மனைவி லட்சுமி மற்றும் மகள் தேஜஸ்வி ஆகியோர் பயணம் செய்துள்ளனர். விடியற்காலை 4.30 மணியளவில் கார் திருவணந்தபுரம் அருகே சென்றுகொண்டிருந்தபோது மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அனைவருக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் இவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மகள் தேஜஸ்வி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். பாலாபாஸ்கர் அவரின் மனைவி, ஓட்டுநர் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.