சமீபத்தில், விஜய் டி.வி-யில் நடந்து முடிந்த ’கிங்ஸ் ஆஃப் டான்ஸ்’ நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராகுலை பலர் மறந்திருக்க மாட்டார்கள். காது கேளாத, வாய் பேச முடியாத ராகுல், பல திறமைசாளிகளோடு போட்டி போட்டு, இறுதிச்சுற்று வரை முன்னேறினார். டைட்டில் வின் பண்ணவில்லை என்றாலும், ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசை வென்றார்.
ராகுலுக்கு இருக்கும் இந்தக் குறையை ஆபரேஷன் மூலம் தீர்த்துவைக்கலாம், அதற்காக 7.5 லட்ச ரூபாய் செலவாகும் என கேள்விப்பட்டதும், க்ரவுட் ஃபண்டிங் மூலம் பணம் சேர்க்க ஆரம்பித்தார், கோரியோகிராஃபர் ஷெரிப். சிகிச்சைக்கான முழுப் பணமும் சேர்ந்த நிலையில், நேற்று கோயம்புத்தூரில் ராகுலுக்கு சிகிச்சை நடந்துள்ளது.
இன்னும் 20 நாள்களில் காயம் ஆறிய பிறகு, ராகுலுக்கு ஒரு மெஷின் பொருத்தப்பட உள்ளதாம். அதன்பிறகு, ராகுலுக்கு நன்றாக காது கேட்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக் கேட்டு, ராகுலும் பேச முயற்சி செய்தால், சில வருடங்களில் சரளமாகப் பேச முடியும் என்று கூறியிருக்கிறார்கள்.