தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றழைக்கபடும் சிம்பு கடந்த 2004 ஆம் ஆண்டு “மன்மதன்” படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரமெடுத்தார். சிம்பு ஹீரோவாக நடித்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார்.
இயக்குனராக சிம்பு அறிமுகமான “மன்மதன்” படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்திருந்தது. இந்த படத்தில் ஏ ஜி முருகன் என்பவரும் இயக்குனராக பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது “மன்மதன்” படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக இயக்குனர் ஏ ஜி முருகன் கூறியுள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் முருகன் தெரிவிக்கையில், விரைவில் மன்மதன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என்றும் அந்த படத்தை சரவணன் தயாரிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இந்த படத்தில் நடிகர் சிம்பு ஹீரோவாக நடிக்கிறாரா இல்லையா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் இயக்குனர் ஏ.ஜி முருகன் கூறியுள்ளார். நடிகர் சிம்பு தற்போது “மாநாடு” படத்திலும், சுந்தர் சி இயக்கிவரும் புதிய படத்திலும் கமிட் ஆகியுள்ளதால், “மன்மதன் 2” படத்தில் நடிப்பது கடினம் என்று கூறப்படுகிறது.