தமிழில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான திரௌபதி திரைப்படத்தின் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு இயக்குனராக மாறியவர் இயக்குனர் மோகன். இவர் ஏற்கனவே பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தை எடுத்திருந்தாலும் திரௌபதி திரைப்படத்திற்கு தான் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பேசப்பட்டவர் இயக்குனர் மோகன். இந்த நிலையில் இவர் இராவணன் குறித்து போட்ட ஒரு ட்வீட், இயக்குனர் மணிரத்னத்தை மறைமுகமாக தாக்குவதாக இருக்கிறது என்று புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.
இந்தியாவில் பல ஆண்டுகளாக சர்ச்சையை ஏற்படுத்தி வந்த அயோத்தி ராமர் கோவில் விவகாரத்திற்கு நேற்று முற்றுப்புள்ளி வைத்து இருந்தார் பிரதமர் மோடி. உ.பி.,யின் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணிக்குகடந்த 5 ஆம் தேதி பூமி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் பலர் தங்களது ஆதரவையும், எதீர்ப்பையும் தெரிவித்து வந்தனர். மேலும், ட்விட்டரில் #landofravanan என்ற ஹேஷ் டேக் கூட ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்தது. இப்படி ஒரு நிலையில் திரௌபதி இயக்குனர் மோகன், ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
அதில், அடுத்தவன் வீட்டு பெண்களை ஆள் இல்லாதப்ப தூக்கிட்டு போறவனை கொண்டாடுறதும், அந்த வகையறா நாங்க அப்படின்னு பெருமையா பேசுறது எல்லாம் வேற லெவல் ப்ரோ.. வேற வேற லெவல்.. கலக்குங்க ப்ரோ என்று பதிவிட்டதோடு, மணிரத்தினம் இயக்கிய ’ராவணன்’ படத்தின் ஒரு புகைபடத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தான் தற்போது மோகன் மீது நெட்டிசன்கள் விமர்சங்களை வைக்க காரணமா ஆகிவிட்டது.
ராவணனை போற்றுபவர்களையும் இராமரை தூற்றுபவர்களையும் கண்டிக்க எத்தனையோ வழிமுறைகள் இருக்கும்போது, மணிரத்தினம் இயக்கிய ’ராவணன்’ படத்தின் ஸ்டில்லை குறிப்பிட்டு, அதில் ‘வகையறா’ என்ற சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தியதற்கு பலரும் மோகனை விமர்சித்து வருகின்றனர். மேலும், மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்தில் கூட இராவணனாக நடித்த விக்ரமை நல்லவராக காட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.