இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த படம் துப்பறிவாளன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தொடர்ந்து ‘துப்பறிவாளன் 2’ படம் உருவாகி வந்தது. மேலும், இந்த படத்தை நடிகர் விஷாலே தயாரித்து, நடித்து வந்தார். இந்த படத்தை மிஸ்கின் இயக்கி வந்த நிலையில் விஷாலுக்கும், மிஸ்கினுக்கும் இடையே வாக்குவாதம் மோதலாக மாற பின்னர் விஷால் இந்த படத்தை தயாரிக்கப்போவது இல்லை என்று இந்த படத்தில் இருந்து விலகினார். மேலும், விஷால் – மிஸ்கின் இருவரும் மாறி மாறி ஒருவருக்கு ஒருவரை குற்றம் சாட்டினார்கள்.
பின் துப்பறிவாளன் 2 படத்தின் மீதிக் காட்சிகளை தானே இயக்கப் போவதாகவும் 2022-ல் அப்படம் திரைக்கு வரும் என்றும் விஷால் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் துப்பறிவாளன் 2 படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இருக்கிறது. அதேபோல் மிஷ்கின் பிசாசு 2 படத்தின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மிஸ்கின் அவர்கள் விஷால் உடன் ஏற்பட்ட பிரச்சினை குறித்தும் பிசாசு 2 படம் குறித்தும் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, பிசாசு படத்தை நான் ஐந்து பாகம் வரை எடுக்கலாம் என்று முடிவு பண்ணி இருந்தேன்.
பிசாசு 2 படம் குறித்து :
ஆனால், அதுக்கு முன்னாடி ஒரு படத்தை முருகானந்தம் தயாரிப்பில் பண்ணலாம் என்று முடிவு செய்து ஹீரோ தேடிக் கொண்டிருக்கும் போது பட்ஜெட் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது முருகானந்தம் பிசாசு 2 படம் பண்ணலாம் என்று கேட்டார். நானும் சரி என்று சொல்லி பிசாசு 2 பண்ணத் தொடங்கினேன். பிசாசு படம் போல் இல்லாமல் பிசாசு 2 படம் வித்தியாசமாக நன்றாக இருக்க வேண்டும் என்று யோசித்து கதை எழுதினேன். அதேபோல் இரண்டு கதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பிசாசு, தன்மை, அன்பு, பாசம் என்று ஒரு புதிய உலகத்துக்கு போனது போல் இந்த படத்தில் எதிர்பார்க்கலாம். இந்தப்படத்தில் பயங்கரமாக எல்லோரும் பயப்படுவார்கள்.
இதுவரைக்கும் நான் எடுத்த பேய் படங்களிலேயே இந்த படம் தான் ரொம்ப பயங்கரமாக இருக்கு. ஆடியன்ஸ் பயப்படுவதற்கு நான் கேரன்டி. அதேபோல் எட்டு வருஷம் படம் பண்ண நினைத்து அதற்கு பிறகு தொடங்கியதுதான் துப்பறிவாளன். எந்த நடிகரும் என்னை இந்த அளவுக்கு நேசித்து இருப்பார்கள் என்று தெரியவில்லை. விஷால் என்னிடம் அன்பாக பழகினார். அப்பா என்று தான் என்னை கூப்பிடுவார். நானும் மகன் என்று தான் அழைப்பேன். நண்பனுக்கு மேல எப்பவும் பேசி சிரித்துக் கொண்டு இருப்போம். ஆனால், சில விஷயங்களால் எங்களுடைய நட்பு பிரிந்தது.
தம்பி ஆதித்யா :
நாங்க ரெண்டு பெரும் கொஞ்சம் கோபப்பட்டுட்டோம். ஆனால், இப்ப பார்த்தால் கூட கட்டியணைத்து நான் முத்தம் கொடுப்பேன். அவனும் அதுதான் செய்வான் என்று நினைக்கிறேன். மேடையில் அவனை திட்டி பேசி கீழே இறங்கும் போது எனக்கு அவன் மேல் அன்பு தான் இருந்தது. இப்பவும் அதே அன்பு அவன் மேல் இருக்கு. இதற்காக நாங்கள் ரெண்டு பேரும் சேர போறோம் அதனால்தான் இப்படி எல்லாம் பேசுவோம் என்று ஒரு குரூப் சொல்லுவார்கள். ஆனால், அப்படியெல்லாம் கிடையாது. நாங்க ரெண்டு பேரும் ரொம்ப ரோசக்காரர்கள். மேலும், என் தம்பி ஆதித்யா துப்பறிவாளன் 2 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறான்.
விஷாலுடனான பிரச்சனை :
அவனை வைத்து நிறைய காட்சி எல்லாம் எடுத்து இருக்கிறார்கள். இப்போது என் தம்பியை நடிக்க கூப்பிட்டால் எனக்கு கொஞ்சம் காசு கொடுக்க வேண்டியது இருப்பதால் அதை கொடுங்க தம்பி அனுப்பி வைக்கிறேன். படத்தை நிறுத்த இப்படி சொல்றேன்னு தப்பா நினைச்சுட்டாங்க. ஆனாலும் பரவாயில்லை நீ போய் நடி. இது நடிகனாக உன்னுடைய கடமை என்று என் தம்பியிடம் சொன்னேன். விஷால் எடுக்கும் இந்த படம் மிகப் பெரிய வெற்றி படமாக வேண்டும். அதை நான் பார்க்க ஆசைப்படுகிறேன். அதுமட்டுமில்லாமல் என் தம்பியை போய் விஷாலுக்கு அசிஸ்டண்ட் டைரக்டர் வொர்க் பண்ணு என்று சொன்னேன். ஏதாவது சந்தேகம் இருந்தால் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோ கால் பண்ணு எல்லாம் சொல்றேன் என்று தான் சொல்லியிருக்கேன்.
துப்பறிவாளன் 2 குறித்து :
என்னுடைய ஆருயிர் நண்பன் விஷால் படம் ஓடக்கூடாது என்று நான் நினைக்க மாட்டேன். இது தான் உண்மை. அவருடைய துப்பறிவாளன் 2 போஸ்டர் எல்லாம் பார்த்தேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. 60 அடிக்கு 40 அடி மேப் பண்ண சொல்லி இருந்தேன். அதை அப்படியே செய்து இருந்தார்கள். அந்த சீன் படத்தில் ரொம்ப நல்லா இருக்கும். போஸ்டரில் விஷால் செம ஸ்டைலாக இருந்தார். பிரசன்னா இன்னும் சூப்பராக இருக்கிறார். விஷாலின் துப்பறிவாளன் 2 படம் பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறினார்