தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சீனிவாசன். இவரை அனைவரும் செல்லமாக பவர்ஸ்டார் என்று தான் அழைப்பார்கள். இவர் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த லத்திகா என்ற படத்தை இயக்கி தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து இவர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இந்த படத்தை தொடர்ந்து பவர்ஸ்டார் அவர்கள் கோலி சோடா, மெர்லின், கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா, என்ன தவம் செய்தாயோ, ஓடு ராஜா ஓடு, காட்டுப் புறா போன்ற பல படங்களில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.
கடைசியாக இவர் 2019ஆம் ஆண்டு எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த கேப்மாரி என்ற படத்தில் பவர் பாண்டி துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது இவர் ஹீரோவாக ஒரு படத்தை இயக்கி நடித்து உள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடித்து இருக்கிறார். மேலும், அந்த படத்தின் புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் சர்ச்சை பொருளாகக் கூட பேசப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் இவர் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே திடீரென்று மயக்கம் போட்டு விழுந்து இருந்தார். பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இவர் தீவிர சிகிச்சையும் பெற்று இருந்தார்.
இதற்கான வீடியோ, புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பவர் ஸ்டாரின் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதில் அவர் தன் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, அன்பு என்ற ஒரு வார்த்தையிலே நான் நிறைய இழந்திருக்கிறேன். நிறைய பேர் பொய்யான அன்பு காட்டியதால் நான் மன ரீதியாகவும் பணம் ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்தேன். இது என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாடம்.
எல்லாமே பட்டு தான் நான் இப்படி இருக்கிறேன். எது உண்மை, எது பொய், எது போலி என்பதை உணர்ந்து எல்லாம் தெரிந்து இருக்கிறேன். மேலும், என்னால் முடிந்த வரை உதவி செய்வேன். அதனால் தான் இந்த கஷ்டத்திலும் நான் செய்த தர்மம் தான் என்னைக் காத்துக் கொண்டிருக்கிறது. நான் சினிமாவிற்கு வருவதற்கு முன் 7, 8 பிஸ்னஸ் செய்திருந்தேன். அதில் 150 பேருக்கு வேலை கொடுத்து 50 லட்ச ரூபாய்க்கு மேல சம்பாதித்து இருந்தேன். அப்ப என்னுடைய பேரு டாக்டர் சீனிவாசன் தான் சொல்வார்கள். அப்போது குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தான் என்னை தெரியும். இதனால் நான் பிரபமாலாக வேண்டும் என்று நினைத்தேன். அப்போது சினிமா துறை சார்ந்த பெண் ஒருவர் வந்து நீங்கள் எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று சொல்லியிருந்தார்.
சரி நானும் என்று போய் பார்க்கலாம் என்று முதல்முறை சினிமாவிற்கு போனேன். அப்போது அங்கு 100 பேருக்கு மேல் தினமும் நடித்து அவர்களுக்கான கூலி வாங்கிக் கொண்டிருந்தார்கள். அதில் சில பேருக்கு சம்பளம் கொடுப்பார்கள், சில பேருக்கு கொடுக்கமாட்டார்கள். அப்போது தான் நான் சினிமாவுக்குள் நுழைந்தேன். பிறகு நான் படத்தை இயக்கி நடிக்க ஆரம்பித்தேன். ஏற்கனவே 150 பேருக்கு வேலை தந்திருக்கிறேன். பின் இன்னும் 100 பேருக்கு வேலை கொடுக்கலாம் என்று நினைத்து தான் நான் சினிமாவில் இறங்கினேன். அதுக்கு கடவுள் தான் காரணம் என்று கூறியிருந்தார்.