எம்.ஜி.ஆர் மேல் எங்க அப்பா போட்ட கேஸ் - ரமேஷ் கண்ணா சொன்ன பிளாஷ் பேக்.

By subhashini · 18/2/2024

எம்ஜிஆர் உடனான உறவு குறித்து நடிகர் ரமேஷ் கண்ணா பகிர்ந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ரமேஷ் கண்ணா. இவர் நகைச்சுவை நடிகர் மட்டும் இல்லாமல் துணை இயக்குனரும் ஆவார். இவர் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற படத்தின் மூலம் தான் நகைச்சுவை நடிகனாக சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருக்கிறார். மேலும், ரமேஷ் கண்ணா ஒரு காமெடி நடிகராக தான் அனைவருக்கும் தெரியும். ஆனால், இவர் இயக்குனர், வசனகர்த்தா போன்ற பல்வேறு திறமைகளை கொண்டவர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ரமேஷ் கண்ணா அளித்த பேட்டியில் எம் ஜி ஆர் குறித்து சொன்னது, என்னுடைய அப்பா நாராயணன்.

ரமேஷ் கண்ணா பேட்டி:

அவர் பாம்பேவில் ஒரு கம்பெனியில் ஜென்ரல் மேனேஜராக இருந்தார். வி என் ஜானகி உடைய அம்மா நாராயணி அம்மா. அவர் என்னுடைய அப்பாவின் உடன் பிறந்த சகோதரி. ஒருமுறை அவர் என்னுடைய அப்பாவை கூப்பிட்டு, இவள் சினிமாவில் நடிக்க ரொம்ப ஆசைப்படுகிறாள். நீ இவளுக்கு ஏதாவது பண்ணு. இவளை கூட்டிட்டு போ என்று கூறி இருந்தார். இதனால் என்னுடைய அப்பா பாம்பேயில் தன்னுடைய வேலையெல்லாம் விட்டு சென்னையில் வி என் ஜானகி உடன் சேர்ந்து சினிமாவில் வாய்ப்புக்காக பல பேரை பார்த்து இருந்தார்.

எம்ஜிஆர்-ஜானகி காதல்:

பின் ஒவ்வொரு படத்தின் போதும் அவருக்கு உதவியாகவும் என் அப்பா இருந்தார். அதற்குப் பிறகு ஜானகிக்கு முதல் திருமணம் ஆனது. அது இருவருக்குமே ஒத்துவராமல் பிரிந்து விட்டார்கள். அப்போது புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருந்தவர் பாபநாசம் சிவன். என்னுடைய அப்பாவுக்கு உறவுக்காரர் தான். விஎன் ஜானகிக்கும் அவர் பெரியப்பா முறை வேணும். அதன் பின் ராஜமுக்தி என்ற பட வாய்ப்பு வந்தது. அதில் கதாநாயகியாக வி என் ஜானகி தான் நடித்தார். எம்ஜிஆர் அந்த படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் போது தான் எம்ஜிஆர்க்கும், வி என் ஜானகிக்கும் புரிதல் ஏற்பட்டு காதல் உருவானது.

எம்ஜிஆர் மீது வழக்கு:

அதற்கு முன்பு எம்ஜிஆர் திருமணம் ஆகியிருந்தவர். இவர்களுடன் காதல் விஷயம் என்னுடைய அப்பாவுக்கு தெரிந்து கோபப்பட்டார். ஜானகி வீட்டிலும் இது பிரச்சனையாகி விட்டது. ஜானகி பிரபலமாக இருந்ததால் அவருடைய பெயரும் புகழுக்கும் பணத்துக்கும் தான் எம்ஜிஆர் ஆசைப்படுகிறார் என்று என்னுடைய அப்பா நினைத்தார். இருந்தாலும் எம்ஜிஆர்- ஜானகி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால், அது சட்டபூர்வமாக செல்லாது என்று என்னுடைய அப்பா அவர்கள் திருமணத்தை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு போட்டிருந்தார். கேசும் வெற்றி பெற்றது. இருந்தாலும், அவர்கள் புரியவில்லை.

எம்ஜிஆர் திருமணம் குறித்து சொன்னது:

அவர்கள் திருமணமும் ரொம்ப நாள் கழித்து தான் சட்டபூர்வமானது. அதற்குப் பின் என்னுடைய அப்பா அவர்கள் காதலை புரிந்து கொண்டார். ஆனால், அப்பாவுக்கும் ஜானவிக்கும் ஆன உறவு தூரம் ஆகிவிட்டது ரொம்ப நாள் கழித்து எம்ஜிஆர் அரசியலில் தீவிரமாக இறங்கி முதல்வரானார். பிற்காலத்தில் என்னுடைய சித்தி பொண்ணு அதாவது என்னுடைய தங்கையை விஎன் ஜானகி மகனுக்கு திருமணம் செய்து கொடுத்தோம். இப்படி இந்த உறவு விஷயங்களை பற்றி எல்லாம் நான் சினிமாவில் யாரிடமும் பேசிக் கொண்டதில்லை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full