இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் ருத்ரதாண்டவம். இந்த படத்தில் ரிஷி ரிச்சர்டு, தர்ஷா குப்தா, ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பலரும் நடித்து உள்ளார்கள். இரண்டாவது முறையாக மோகன் ஜி, ரிஷி இந்த படத்தில் இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய மோகன், என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் பாதிரியாக உள்ளார். அவர் திரௌபதி படம் பார்த்துவிட்டு இந்த பட கதையை எனக்கு கூறினார்.
இது மாதிரி ஒரு படம் எடுக்க உனக்கு தைரியம் இருக்கிறதா? என்றும் கேட்டார். அதற்கு பிறகு தான் கிறிஸ்துவ மதத்தை எப்படி கார்ப்பரேட் மாதிரி மாற்றி வைத்துள்ளார்கள் என்று எனக்கு தெரிய வந்தது. மலையாளத்தில் வெளியான ட்ரான்ஸ் திரைப்படம் அதைப்பற்றியே தான் பேசியிருந்தது.தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை நான் படமாக எடுத்தால் பெரிய அளவில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கிடைக்கும் என்று நினைத்தேன்.
தற்போது இருக்கும் காலகட்டத்தில் இந்து மதத்தை அழித்து விடுவேன் என்று ஒரு மேடை போட்டு பேசி கைத்தட்டு வாங்கி விடுகிறார்கள். அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய கார்ப்பரேட் அரசியல் இருக்கிறது என்பது பொது மக்களுக்கு தெரியாது என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அதில், கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ்ஸை மறைமுகமாக குறிப்பிடுவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் கடந்த 2016 ஆம் ஆண்டு நடத்திய மத போதக கூட்டத்தில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் சாத்தான்களின் இருப்பிடம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கோயில்கள்தான் சாத்தான்களின் அரண்கள் என்று பேசி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
அவரின் அந்த பேச்சின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ அவரை கைது செய்ய வேண்டும் என்று பல இந்து அமைப்புகள் புகார் அளித்த நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த ஸ்னீக் பீக் காட்சி அவரை சித்தரித்து இருப்பது போலவே தெரிகிறது என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.