மிக மிக வசதி, வாட்டும் ஏழ்மை என இருவித சூழலையும் எதிர்கொண்டிருக்கிறேன். வசதியோடு நடிச்ச காலத்துக்கும், குடும்பத் தேவைக்காக நடிக்கும் காலத்துக்குமான இடைவெளியில் நான் கற்ற பாடங்கள் மிக அதிகம். அதெல்லாம் மனதின் அழியாச் சுவடுகள்” என நெகிழ்ச்சியுடன் பேசுகிறார், நடிகை சாந்தி வில்லியம்ஸ்.
முதல் சினிமா வாய்ப்பு எப்படிக் கிடைச்சுது ?
“பிறந்தது கோயம்புத்தூர். வளர்ந்ததெல்லாம் சென்னை. அசோக் நகரில் ஒரு ஸ்கூல்ல எட்டாவது படிச்சுட்டிருந்தப்போ, மலையாள ‘செம்மீன்’ படத்தை இயக்கிய ராமு சார், ஸ்கூலுக்குப் பக்கத்தில் வசித்தார்.
நான் சிவப்பாகவும் உயரமாகவும் இருப்பேன். ஸ்கூலுக்கு காரில் வந்து இறங்கும் என்னைப் பலமுறை பார்த்திருக்கார். அதனால், காட்டுவாசிகள் பற்றிய மலையாள டாக்குமென்ட்ரி படத்தில் நடிக்க கேட்டார். அப்படித்தான் 1972-ம் வருஷம் அதில் நடிச்சேன். 11 வயசுலேயே சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினேன். தொடர்ந்து நிறைய மலையாள படங்களில் ஹீரோயினா நடிச்சேன்.
தமிழ் சினிமா என்ட்ரி எப்படி அமைஞ்சது ?
“1976-ம் வருஷம் ‘மாந்தோப்பு கிளியே’ படத்தின் மூலமா தமிழில் அறிமுகமானேன். ‘பணம் பெண் பாசம்’, ‘மூடுபனி’ உள்ளிட்ட நிறையப் படங்களில் நடிச்சேன். ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்துக்குப் பிறகு கல்யாணமாகி நடிப்பை நிறுத்திட்டேன்
கணவரின் இறப்பு உங்க வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது ?
“கணவர் வில்லியம்ஸ், மலையாள சினிமாவின் பிரபலமான கேமராமேன். அவரும் நானும் ஒரு மலையாளப் படத்தில் வொர்க் பண்ணினோம். அவருக்கு என்னைப் பிடிச்சுப்போய் என் பெற்றோரிடம் பேசினார். 1979-ம் வருஷம் கல்யாணம் ஆச்சு. அடுத்தடுத்து நான்கு குழந்தைகள் பிறந்தாங்க. குடும்பத்தை கவனிச்சுக்க நடிப்பை நிறுத்திட்டேன். அந்த நேரத்தில் சினிமா துறையினருக்கும், சில நடிகர்களுக்கும் என் கணவர் செய்த உதவி ரொம்ப பெருசு.
அவரின் கால்ஷீட்டுக்காக காத்துகிட்டிருந்த பிரபலங்கள் அதிகம். ஆனால், உடல்நிலை சரியில்லாமல் அவர் இருந்தப்போ, உதவிக்குனு யாருமே வரலை. என் கணவர் கோடிகளில் சம்பாதிச்ச காலத்திலும் 200 ரூபாய் புடவைதான் கட்டுவேன். அதனால், திடீர் வறுமை என் மனசில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலை. ஆனால், 75 பைசா கொடுத்து அவர் பஸ்ல போகும் சூழ்நிலை வந்தப்போ பல நாள் அழுதிருக்கேன். எங்கிட்ட இருந்த ஆயிரம் புடவைகளை வித்துதான் குழந்தைகளைப் படிக்கவெச்சேன். குடும்பச் செலவுக்காக 18 வருஷத்துக்குப் பிறகு 1990-ம் வருஷம் நடிப்புக்கு ரீ-என்ட்ரி கொடுத்தேன். ‘உதயா’, ‘ஜோடி’, ‘டும் டும் டும்’, ‘மனதை திருட்டிவிட்டாய்’, ‘பாபநாசம்’ உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்ளில் நடிச்சுட்டேன். ஆனாலும், கணவரை இழந்த துயரத்திலிருந்து இன்னும் மீள முடியலை.
என்னோட கஷ்டமான சூழல்ல ராதிகா மேடம்தான் ‘சித்தி’ சீரியல்மூலமா சின்னத்திரையில் முதல் வாய்ப்பு கொடுத்தாங்க. தொடர்ந்து ‘வாணி ராணி’ வரை அவங்களின் எல்லா சீரியல்களிலும் நடிச்சுட்டிருக்கேன். ‘மெட்டி ஒலி’ ராஜம்மா கேரக்டர் பெரிய ரீச் கொடுத்துச்சு. ரொம்ப நெகட்டிவ் ரோல் அது.
சீரியல் ஒளிபரப்பான சமயத்தில் தினமும் என்னை திட்டினவங்க எண்ணிக்கைக்கு கணக்கே இல்லை. ‘எதுக்கு இப்படி மருமகளைக் கொடுமை பண்றே’னு அடிக்காத குறையாக பாய்ஞ்சவங்க உண்டு. அந்த சீரியல்ல நடிச்சுட்டிருந்தப்போதான் என் கணவர் காலமானார். அப்போ பொருளாதார ரீதியாக ரொம்ப கஷ்டத்தில் இருந்தேன். ‘மெட்டி ஒலி’ டைரக்டர் திருமுருகன் சார் மற்றும் தயாரிப்பாளர் சித்திக் சார் செய்த உதவிகளை என் வாழ்நாளுக்கும் மறக்கமாட்டேன்.”