ரஜினிக்கு டப்பிங், இளையராஜா கொடுத்த எச்சரிக்கை - இன்று பிறந்தநாள் கொண்டாடும் மனோவை பற்றி அறிந்திராத தகவல்.

By Rajkumar · 26/10/2023

தமிழ் சினிமாவில் எண்ணெற்ற பாடல்களை பாடி மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் மனோ. இவரை பெரும்பாலும் spbயின் மகன் என்று தான் நினைத்து இருந்தனர். தமிழ் சினிமாவில் பாடகர் மனோ ஃபாஸில் இயக்கத்தில் வந்த பூவிழி வாசலிலே படத்தில் வரும் அண்ணே அண்ணே நீ என்னா சொன்ன என்ற பாடலின் மூலம் தமிழில் அறிமுகமானார். பிறகு எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் பாடல்கள், சொல்ல துடிக்குது மனசு படத்தில் இடம்பெற்ற தேன்மொழி எந்தன் தேன்மொழி பாடலின் மூலம் பிரபலம் ஆனார்.

மனோவின் இயற்பெயர் நாகூர்பாபு. இவர் ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தெனாலி என்ற இடத்தில் பிறந்தவர் ஆவார். இவரின் தந்தை ரசூல் ஆல் இந்தியா ரேடியோவில் மியூசிசியன் ஆக பணிபுரிந்தவர். தாய் ஷகிதா ஆந்திராவில் அந்தகாலத்தில் பாப்புலரான மேடை நடிகை ஆவார். முதலில் மனோ 1970ம் ஆண்டு முதல் தெலுங்கு படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரம் செய்ய ஆரம்பித்தார் மனோ. சிறு வயதிலேயே கர்நாட்டிக் உள்ளிட்ட இசைகளை கற்று தேர்ந்தார்.

தமிழில் இளையராஜா தான் இவரை அறிமுகப்படுத்தினார். நாகூர் பாபு என்ற பெயரை மனோ என மாற்றியவரும் இளையராஜாதான். அவரின் அண்ணே அண்ணே, தேன்மொழி, மதுர மரிக்கொழுந்து வாசம் உள்ளிட்ட பாடல்கள்தான் மனோவை பிரபலம் ஆக்கியது. பல பாடல்களை குரல் மாற்றி பாடுவதில் வல்லவரான மனோ இந்திரன் சந்திரன் படத்தில் இடம்பெற்ற அடிச்சுது கொட்டம் என்ற பாடலை குரல் மாற்றி கர கர குரலில் கஷ்டப்பட்டு பாடி ஒரு வாரம் தொண்டையில் பிரச்சினை ஏற்பட்டு கிடந்தார்.

பாடகர் மட்டுமல்லாது மனோ,டப்பிங் கலைஞரும் கூட. நடிகர் ரஜினிகாந்த் படங்கள் தெலுங்கில் வெளியாகும்போதெல்லாம் அவருக்காக தெலுங்கில் டப்பிங் பேசியிருக்கிறார் மனோ. அதே போல நடிகர் கமல்ஹாசனுக்கு எஸ்பிபி தெலுங்கில் டப்பிங் பேச, சதிலீலாவதி மற்றும் பம்மல் கே சம்மந்தம் படங்களில் மட்டும் மனோ டப்பிங் பேசியிருப்பார். பல தமிழ் படங்களில் மனோ நடிக்கவும் செய்துள்ளார்.

அதில் முக்கியமான திரைப்படம் கமல்ஹாசனுடன் நடித்த சிங்கார வேலன் படம் ஆகும். மலையாளத்திலும் சூர்ய மனசம் என்ற படத்தில் நடித்துள்ளார்.இறுதியாக சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் என்ற படத்தில் மிர்ச்சி சிவாவின் தந்தையாக நடித்து இருந்தார்.அதற்க்கு முன்னர் பல நிகழ்ச்சிகளில் பாடகர் மனோ கலந்து கொண்டிருந்தாலும் நடித்த படங்களை பொறுத்தவரையில் பெரிதாக நடிக்கவில்லை. அதற்கு காரணம் இளையராஜா தான் என்று மனோ கூறி இருந்தார்.

இளையராஜா நடிக்க வேண்டாம் என தடுத்து விட்டாரா? அல்லது வாய்ப்புகள் தவறும் என கூறினாரா? என்று அவரிடம் பிரபல ஊடகம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த பாடகர் மனோ கூறுகையில் "நீங்கள் நடிக்க சென்றால் உங்களுக்காக பாடல்கள் காத்திருக்காது என இளையராஜா கூறினார். ஏனெற்றால நான் "சிங்காரவேலன்" படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது நான் பாடிக்கொடுக்க வேண்டிய பாடல்கள் இருந்தது.

ஆனால் 15க்கும் மேற்பட்ட பாடல்களை நான் படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் பாடி கொடுத்தேன். அப்போதுதான் இளையராஜா 'மீண்டும் நடிக்கச் சென்றால், உனக்காக பாட்டு காத்துக்கொண்டிருக்காது' என்று சொன்னார். அது எனக்கு கொடுத்த மிகப்பெரிய எச்சரிக்கையாக நான் எடுத்துக்கொண்டேன் என தெரிவித்தார்.இப்போதும் இளையராஜா தனது சொந்த இசை கச்சேரிகளுக்கு 80களில் எஸ்.பி.பி, ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பாடிய பாடல்களை பாடுவதற்கு கூட மனோவைத்தான் அழைப்பார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full