ஷாருக் கான் மகன் ஆர்யன் கானை விடுவிக்க கோடி கணக்கில் பேரம் பேசியதை சொன்ன சாட்சி திடீர் மரணம் அடைந்து உள்ள தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாலிவுட் வட்டாரத்தில் பல ஆண்டு காலமாக சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் ஷாருக்கான். ஆனால், ஷாருக்கானின் மகன் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான சம்பவம் அனைவருக்கும் தெரிந்ததே. கடந்த ஆண்டு ஷாருக்கானின் மகன் ஆர்யான் மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதைப் பொருளை பயன்படுத்தி இருக்கிறார். இதை அறிந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் கடந்த அக்டோபர் மாதம் கப்பலில் சாதாரண பயணிகள் போல் பயணம் செய்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் உட்பட 8 பேர் கைது செய்யபட்டார்கள். மேலும், அவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதோடு ஆர்யான் உட்பட 8 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து கைது செய்து இருந்தார்கள். இதனால் சோஷியல் மீடியாவில் பல சர்ச்சைகளும் கருத்துக்களும் எழுந்தது. மேலும், ஷாருக்கான் தன்னுடைய மகன் கைது செய்யப்பட்டதில் இருந்து எந்த ஒரு வேலையிலும் கவனம் செலுத்தவில்லை. படப்பிடிப்புகள், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பது, கதைக்கேற்பது, விளம்பர படங்களில் நடிப்பது என அனைத்து வேலைகளையும் ஒத்தி வைத்து விட்டார்.
ஷாருக்கானின் மகன் செய்த வேலை:
ஷாருக்கான் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் என்று சொல்லலாம். பின் ஷாருக்கான் ஜாமீன் கோரி கோர்ட்டில் மனு போட்டு இருந்தார். ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் சிறையில் வைக்கப்பட்டு இருந்தார்கள். இதை தொடர்ந்து ஷாருக்கான் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. பல போராட்டங்களுக்கு பிறகு சமீபத்தில் தான் அவருடைய மகன் சிறையிலிருந்து வெளிவந்தார். மேலும், ஒவ்வொரு வாரமும் போதைபொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வார வாரமும் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.
ஷாருக்கான் மகனை விடுவிக்க நடந்தது:
மகன் வெளிவந்த உடன் மன நிம்மதி அடைந்த சாருக்கான் வழக்கமான தன்னுடைய பணிகளில் ஈடுபட திட்டமிட்டு உள்ளார். அதோடு தன் மகனையும் கூடுதல் கவனத்துடன் பார்த்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறார் என்று அவரின் நண்பர்கள் வட்டாரத்தில் கூறப்பட்டது. இந்நிலையில் ஷாருக்கானின் மகனை விடுவிக்க பேரம் பேசியதை சொன்ன பிரபாகர் தற்போது மரணம் அடைந்து உள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆர்யன் கான் கைது செய்யப்பட்டபோது ஷாருக்கானின் மகனை விடுவிக்க ஷாருக்கானின் மேலாளர் பண பேரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பிரபாகர் இறப்புக்கு காரணம்:
கிரண் கொஷாவி என்பவர் தான் இந்த பண பேரத்தில் ஈடுபட்டதாக கிரணின் பாதுகாவலர் பிரபாகர் சாகில் குற்றம் சாட்டியிருந்தார். இதை அவர் கிரணும், ஷாருக்கான் மேலாளரும் பேசியதை ஒட்டுக்கேட்டதாகவும் போலீசிடம் தெரிவித்திருந்தார். இதையடுத்து பிரபாகரைப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாகச் சேர்த்துள்ளனர். இந்த நிலையில், பிரபாகர் திடீரென மரணமடைந்து இருக்கிறார். இவர் மும்பை செம்பூரில் வசித்து வந்தார். வீட்டில் திடீர் என்று அவருக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. உடனே அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சேர்ந்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார்.
குற்றப்பத்திரிகை தாக்கல் குறித்த தகவல்:
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரிகள் டெல்லியில் இருந்து வந்து பிரபாகரிடம் இருந்து வாக்குமூலம் வாங்கி விட்டு சென்றதாக பிரபாகர் வழக்கறிஞர் குறிப்பிட்டிருந்தார். தற்போது பிரபாகரனின் இறப்பு இந்த வழக்கில் முக்கிய பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இதற்கிடையில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிறப்பு நீதிமன்றம் 60 நாட்கள் அவகாசம் வழங்கியது. ஆனால், அவர்கள் 90 நாட்கள் அவகாசம் கொடுக்கும்படி கேட்டிருக்கின்றனர். அதை அடுத்து நீதிமன்றம் 180 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று அவகாசம் கொடுத்தது. ஆனால், 180 நாட்கள் முடிந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.