35 நரிக்குறவ மக்கள் பர்ஸ்ட் கிளாஸ் சீட்டில் அமர்ந்து பத்து தல படத்தை பார்த்துள்ள சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. சிம்பு நடிப்பில் பத்து தல திரைப்படம்நேற்று வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன், கௌதம் வாசுதேவ் மேனன், டீஜே, ஜோ மல்லூரி, மலையாள நடிகை அனு சித்தாரா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியான இந்த திரைப்படத்தை காண முதல் நாளே ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கில் கூடி கொண்டாடி இருந்தனர்.
இப்படி ஒரு நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் முதல் காட்சியை காண ரசிகர்கள் குவிந்திருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் நரிக்குறவர் பெண் ஒருவர் டிக்கெட் இருந்தும் திரையரங்கிற்குள் அனுமதிக்க மறுக்கப்பட்டுள்ளார் என்றும், அந்த பெண்ணை அனுமதிக்க மறுத்ததோடு அவரை ஊழியர் அசிங்கமாக திட்டியதாகவும் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். அது மட்டும் அல்லாத பல்வேறு பிரபலங்களும் இந்த விவகாரம் குறித்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து சம்மந்தப்பட்ட ரோகிணி திரையரங்கம் விளக்கம் ஒன்றை வெளியிட்டு இருந்தது.
அதில் ‘படம் பார்க்க வந்தவர்கள் அவர்களுடன் சில குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார்கள். இந்தத் திரைப்படம் யூ/ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படம் என்பதால் சட்டத்தின் படி 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இந்த படத்தை பார்க்க அனுமதி கிடையாது எங்களுடைய திரையரங்க ஊழியர்கள் இரண்டு வயது, ஆறு வயது எட்டு வயது மற்றும் பத்து வயது சிறுவர்களுக்கு மட்டும் தான் அனுமதியை மறுத்திருந்தார்.
ஆனால் அதற்குள்ளாக அங்கே சூழ்ந்த சில ரசிகர்கள் இதனை புரிந்து கொள்ளாமல் வேறு விதமாக சித்தரித்து விட்டார்கள். ஆனால், இதே குடும்பத்தினர் படம் பார்க்க உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வீடியோவும் இணைக்கப்பட்டு இருக்கிறது’ என்று குறிப்பிட்டு அந்த நரிக்குறவர் குடும்பத்தினர் திரையரங்கற்குள் அமர்ந்து படத்தை பார்க்கும் வீடியோ ஒன்றையும் பதிவிட்டு இருந்தது.
இதனை கண்ட நெட்டிசன்கள் பலர் இப்போது மட்டும் எப்படி சிறுவர்களை யூ/ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படத்தை பார்க்க அனுமதித்தீர்கள் என்று கேள்வி எழுப்பி வந்தனர். அதே போல யூ/ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படத்தை சிறார்கள் பார்க்க அனுமதி இல்லை என்பது போலியான தகவல் என்றும் கூறி வந்தனர். இந்த நிலையில் தஞ்சையில் உள்ள விஜயா திரையரங்கில் ஜோதி அறக்கட்டளையின் சார்பில் 35 நரிக்குறவர்கள் முதல் வகுப்பு அமர வைக்கப்பட்டு பத்து தலை படத்தை பார்த்து இருக்கிறார்கள்.
இந்த சம்பவம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து ஜோதி அறக்கட்டளை சார்பாக பேசியவர், “ ரோகிணி திரையரங்கத்தில் நிகழ்ந்த சம்பவம் வருந்ததக்க விஷயம்.மக்கள் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தும் விதமாகத்தான் நாங்கள் இந்த செயலை ஜோதி அறக்கட்டளை மூலம் செய்து இருக்கிறோம். இது போன்ற விஷயங்கள் வரும் காலத்தில் தொடர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.