முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த கத்தி படம் மிக பெரிய வெற்றிபெற்றது. சமூக அக்கறை கொண்ட படமான கத்தி திரைப்படத்தில், பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ள தண்ணீரை உருவத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்த கதைக்களம் அமைந்திருக்கும்.
அந்த படத்திற்கு பின் நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ஒரு ரசிகர் கேட்ட கேள்வி “நீங்கள் கோலா விளம்பரத்தில் நடித்தவர், இப்போது அந்த நிறுவனத்தை எதிர்த்து கத்தி படத்தில் பேசி இருக்கீங்க. இது முரண்பாடாக உள்ளதே”
அதற்கு விஜய் அளித்த பதில் “இனி எப்போதும் கோலாவிற்கு ஆதரவு அளிக்கமாட்டேன். கத்தி படத்தின் கதையை கேட்கும் போது அர்த்தம் உள்ளதாய் தோன்றியது அதனால் ஜீவா கதாபாத்திரத்தின் மூலமாக குரல் கொடுத்தேன்”
அதே போல வேலைக்காரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனும் இனி விளம்பரங்களில் நடிக்கமாட்டேன் என்று படம் வெளிவருவதற்கு முன்பே கூறிவிட்டார். அவர் எதற்காக அவ்வாறு கூறினார் என்பது இந்த படத்தை பார்த்தவர்களுக்கு புரியும். ஒரு தவறான பொருளை நடிகர் நடிகைகள் விளம்பரம் செய்தால் அவரது ரசிகர்கள் அதை கடைகளில் வாங்க தொடங்கிவிடுகிறார்கள். இந்த வசனம் படத்தில் பல இடங்களில் இடம் பெற்றுள்ளன.
தாங்கள் அறியாமல் செய்த தவறை புரிந்து கொண்டு மீண்டும் அதை செய்யமாட்டோம் என்று பொதுவெளியில் கூறுவதற்கும் ஒரு மனம் வேண்டும்.
இது போன்ற சமூக அக்கறை கொண்ட திரைப்படங்கள் நிறைய வர வேண்டும், சினிமாவை சமூக மாற்றத்திற்காக அமைக்க வேண்டும்.