பாலிவுட்டின் புகழ்பெற்ற நடன கலைஞராக திகழ்ந்தவர் சரோஜ் கான். கடந்த சனிக்கிழமை மும்பை குருநானக் மருத்துவமனையில் சுவாசக் கோளாறு பிரச்சனை காரணமாக சரோஜ் கானை அனுமதிக்கப்பட்டார். நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சரோஜ் கான் மரணமடைந்தார். அவருடைய மறைவிற்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் விஜய்யின் வசீகரா படத்தின் இயக்குனர் செல்வபாரதி மறைந்த நடனக் கலைஞர் சரோஜ் கான் குறித்து சில நினைவுகளை பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியது, சரோஜ் கான் அவர்கள் நடன வடிவமைப்பாளராக விஜய் நடித்த ‘வசீகரா’ படத்தில் பணிபுரிந்தார்.

இவர் தமிழில் பணிபுரிந்த படங்களில் முக்கியமான படம் என்று சொன்னாலே அது வசீகராவை சொல்லலாம். நான் வசீகரா படத்திற்கு கமிட்டானபோது வேறொரு நடன வடிவமைப்பாளரை படத்தில் பயன்படுத்தலாம் என்று நினைத்தேன். பிறகு நான் விஜய்யிடம் சரோஜ் கான் பற்றி சொன்னேன். அப்போது சரோஜ் கான் தமிழில் படங்கள் எதுவும் பண்ணவில்லை. இருந்தாலும், ஹிந்தியில் அவர் கோரியோகிராஃப் செய்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்.
இதனால் தான் நான் விஜய்யிடம் அவர் பெயரை சொன்னேன். விஜய்யும் அவர் பெரிய மாஸ்டர் நம்மை பெண்டு கிளப்பி விடுவார் என்று சொன்னார். பிறகு நான் சரோஜ் இடம் தொடர்புகொண்டபோது அவருக்கு தமிழ் படம் மீது முதலில் இண்ட்ரெஸ்ட் இல்லை. விஜய் தான் ஹீரோ என்றவுடன் அவருக்கு இண்ட்ரெஸ்ட் வந்துவிட்டது. அவரும் அருமையாக டான்ஸ் ஆடுவார். அதனால் எனக்கு நல்ல சேலஞ்சாக இருக்கும். நான் தமிழில் கண்டிப்பாக வந்து பண்ணுகிறேன் என்று தெரிவித்தார். ஒவ்வொரு பாடல்களுக்கும் நான்கு நாட்கள் என்று தேதிகள் வாங்கி ஷூட் செய்தோம். ஆனால், அவர் இரண்டு பாடல்களையும் மூன்று நாட்கள் என்ற வீதத்தில் சுலபமாக முடித்து கொடுத்துவிட்டார்.

அவர் செட்டிற்கு வந்துவிட்டால் அவர் தன்னுடைய வேலையை பார்க்க தொடங்கிவிடுவார். தமிழில் அவரை வைத்து நான் இரண்டு பாடல்களை எடுத்தது மிகவும் பெருமை படுகிறேன். விஜய் தன்னுடைய நடனத்தின் மூலம் சரோஜ் மாஸ்டரையே ஆச்சரியப்படுத்திவிட்டார். அதற்கு சரோஜ் கான் விஜய் சார் நல்ல டான்ஸர் என்று தெரியும். அதேபோல நல்ல மனிதராகவும் இருக்கிறார். சில ஹீரோக்கள் நடனத்தில் சில மாறுதல்கள் சொல்வார்கள். ஆனால், தம்பி ஒரு மாறுதல்கள் கூட சொல்லவில்லை. அதுவே சரோஜ்க்கு ரொம்ப பிடித்திருந்தது. சரோஜ் கான் மாஸ்டர் சினிமாவிற்காகவே வாழ்ந்தவர். கண்டிப்பாக சினிமாவிற்கு அவருடைய இழப்பு மிகவும் பெரிதாக இருக்கும். இந்நிலையில் அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று பிராத்திக்கிறேன்.





