2020 ஆம் ஆண்டு மிகவும் சோகமான ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே கடந்த சில மாதங்களாக கொரோனா பிரச்சனையில் ஷூட்டிங் இல்லாமல் சினிமா பிரபலங்கள் கஷ்டத்தில் இருந்து வரும் நிலையில் சினிமா மற்றும் சீரியல் துறையில் அடுத்தடுத்து மரணங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் பிரபல மலையாள சீரியல் நடிகரான சபரிநாத் விளையாடிக் கொண்டு இருந்த போது நெஞ்சு வலி ஏற்பட்டு மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மலையாள தொலைக்காட்சியில் பல்வேறு பிரபலமான தொடர்களை நடித்த மலையாள சின்னத்திரை நடிகர்களில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் நடிகர் சபரிநாத். இவர் மலையாளத்தில் பல்வேறு சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதிலும் மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடாத பைங்கிளி, சகரம் சாக்ஷி, மின்னுகிட்டு பிரணயானி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.
மேலும் இவர் தற்போது பாடாத பைங்கிலி எனும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள். 43 வயதாகும் இவர், நேற்று மாலை வீட்டின் அருகே பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் குடும்பத்தினர் உடனடியாக திருவனந்தப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நடிகர் சபரிநாத்தின் மறைவிற்கு பல்வேறு மலையாள சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர் நடிகைகள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், கொரோனா பிரச்சனை காரணமாக இவரது இறுதி சடங்கில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.