காலா படத்தை சிங்கப்பூரிலிருந்து பேஸ்புக்கில் நேரலையில் ஒளிபரப்பு செய்த நபரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்தனர் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள `காலா’ படம் இந்தியா முழுவதும் இன்று வெளியாகிறது. இந்தப் படத்துக்கு தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. அரசியல் வருகை குறித்து அறிவித்த பிறகு வரும் ரஜினியின் படம் என்பதால், இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்தப் படம் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் ஏற்கெனவே வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சிங்கப்பூரில் ஒருவர் `காலா’ படத்தை திரையரங்கிலிருந்து பேஸ்புக்கில் நேரலையில் ஒளிபரப்பு செய்துள்ளார். அவரை சிங்கப்பூர் காவல்துறையினர் கைது செய்தனர் என்று விஷால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் `காலா’ படம் காலையில் வெளியாகவுள்ள நிலையில், திரையரங்குகளில் போனில் எடுக்கப்பட்ட காட்சிகள் வாட்ஸ்அப்பில் தற்போது வைரலாகிவருகிறது.