பாலிவுட் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் இந்தி நடிகர் அமீர் கான். நடிப்பையும் தாண்டி பல ஏழை எளிய மக்களுக்கு உதவி வரும் அமீர் கான் தன்னுடன் பணியாற்றி நபருக்காக நடு இரவில் செய்த உதவி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.
பாலிவுட்டில் பிரபல சவுண்ட் என்ஜினீயரான சஜித் கொயேரி 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியில் வெளியான பல படங்களில் சவுண்ட் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு அமீர் கான் நடிப்பில் வெளியான “தங்கள்” படத்தில் சவுண்ட் என்ஜினீயருக்கான தேசிய விருதையும் பெற்றார்.
சமீபத்தில் சஜித் கொயேரிக்கு பக்கவாதம் ஏற்பட்டு மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அங்கே நீண்ட நேரம் ஆகியும் மருத்துவர்கள் வந்து அவருக்கு சிகிச்சை அளிக்காததால் அவரது நிலைமை மோசமாக ஆகியுள்ளது. இதனால் செய்வதறியாமல் தவித்த சஜித் கொயேரி குடும்பத்தினர் பின்னர் அமீர் கானுக்கு போன் செய்துள்ளனர்.
இரவு வேலை என்றும் பாராமல் தன்னுடன் வேலை செய்த நபருக்காக மருத்துவமனைக்கு விரைந்துள்ள நடிகர் அமீர் கான், சஜித் கொயேரியை மும்பையில் உள்ள அம்பானி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். பின்னர் அந்த மருத்துவமனையின் உரிமையாளரும் அமீர் கானின் நண்பருமான அனில் அம்பானிக்கு போன் செய்து சஜித்க்கு உரிய சிகிச்சையை உடனடியாக அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையடுத்து சஜித்திற்கு மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சையளிக்கபட்டு அவரது நிலை அதிகாலை 3 மணி அளவில் சரியாகியுள்ளது. தன்னுடன் பணியாற்றிய நபருக்கு பிரச்சனை என்றதும் இரவு நேரம் என்றும் பாராமல் அமீர் கான் இந்த அளவிற்கு மெனெக்கெட்ட விடயம் அனைவராலும் பாராட்டபட்டு வருகிறது.