அறிமுகம் இயக்குனர் ஏ.எஸ் முகுந்தன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் மெட்ராஸ் மாஃபியா கம்பெனி. இந்த படத்தில் ஆனந்தராஜ், பிக் பாஸ் சம்யுக்தா, ஆராத்யா, முனிஸ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ், ஆனந்த் பாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை அண்ணா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் இந்த மாதம் 14ஆம் தேதி திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது.

அப்போது விழாவில் கலந்து கொண்ட நடிகர் ஆனந்தராஜ், இந்த படத்தில் என்னுடன் நடித்த அனைத்து நடிகர்களுக்குமே நன்றி. இந்த படத்தை வாழ்த்த வந்திருக்கும் ஆர்.கே செல்வமணி, ஆர்.பி உதயகுமார்
என் நண்பர்கள் தான். இவர்களுடைய முதல் படத்தில் நான் நடித்திருக்கிறேன். படத்துக்காக எவ்வளவு மெனக்கிட முடியுமோ அந்த அளவுக்கு இருவருமே உழைப்பார்கள். அவர்களுக்கு நிகராக உழைத்தால் தான் நானும் இந்த திரை துறையில் இருக்கிறேன். நான் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறேனோ அதை மக்களுக்கு எடுத்துக்காட்டுவேன்.
ஆனந்தராஜ் பேட்டி:
என்னால் பயமுறுத்தவும் முடியும், சிரிக்க வைக்க முடியும். ஆனால், இந்த திறமையை என்னிடம் வளர்த்தவர்கள் இந்த இயக்குனர்கள் தான். எங்களிடம் பணம் குறைவாக இருக்கலாம். ஆனால், நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். பணம் அதிகமாக இருந்தால் அதை நாம் காப்பாற்ற வேண்டும். குறைவாக இருந்தால் அது நம்மை காப்பாற்றும். இதை ரஜினி மாதிரி பெரிய ஸ்டார் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்கள். அதனால் அதை விட்டுவிடலாம். நான் இந்த துறைக்கு வரும்போது எனக்கு யாருமே கிடையாது. எந்த சினிமா பின்புலமும் கிடையாது.

சினிமா பற்றி சொன்னது:
நான் மட்டுமல்ல ஆர் கே செல்வமணி, ஆர்பி உதயகுமார் போராடி இந்த துறையில் கால் பதித்தவர்கள் தான். நடிக்க தொடங்கும் போதெல்லாம் எனக்கு உள்ளுக்குள்ளே ரொம்ப பயமாக இருக்கும். என்னை விட திரைத்துறையை அதிகம் நேசித்தவர் என்னுடைய அப்பா. பார்த்திபன் சாரின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். சூட்டிங் முடிவதற்கு இரவு 11 மணி ஆகும் என்று சொன்னார். நான் காத்திருந்தேன். பின் சூட் முடித்து விட்டு நான் கிளம்பும்போது அடுத்து இரண்டு நாட்களுக்கு சூட்டிங் கிடையாது என்று சொன்னார்கள். அடுத்த நிமிடமே எனக்கு வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. என்னுடைய அப்பா இறந்து விட்டார் என்றார்கள். நான் ஒரு நடிகராக இங்கு நிற்கிறேன் என்றால் அதற்கு என்னுடைய அப்பா ரொம்ப முக்கிய காரணம்.
https://www.youtube.com/watch?v=hTCiS9vIWm4
கசப்பான அனுபவம்:
எனக்கு இந்த திரை துறையில் போட்டி இல்லை என்று நினைக்கிறீர்களா? என் முதுகில் குத்தியவர்களால் கடுமையான காயம் ஏற்பட்டிருக்கிறது. என்னை குத்தி குத்தி கொலை செய்துவிட்டார்கள். வீட்டுக்கு வந்து ஒரு படத்துக்கு பேசுவார்கள். ஆனால், அந்த படத்தில் நான் இருக்கவே மாட்டேன். காரணம் தெரியாது. ஒரு கலையை கலையாக மட்டும் பாருங்கள். ஆர்கே செல்வமணி, ஆர்பி உதயகுமார், பேரரசு போன்றவர்கள் பெரிய இயக்குனர்கள். ஆனால், எங்களுடைய சாபக்கேடு என்ன என்று தெரியவில்லை. நம்மையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஒரு திரை உலகை கட்டமைக்கிறார்கள். அதையும் கடந்து தான் ஓடிக்கொண்டே இருக்கிறோம் என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருக்கிறார்.






