திரைப்பட நடிகர்கள் சிலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பற்றி பல கேள்வி பட்டிருக்கிறோம். அது போல சமீபத்தில் ஆந்திர நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி ராமா ராவ் அவர்களின் மகனுமாகிய நந்தமுரி ஹரிகிருஷ்ணா, இன்று (ஆகஸ்ட் 29) காலை விபத்தில் பலியாகியுள்ள சம்பவம் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கில் பிரபல நடிகர் ஜூனியர் என் டி-யாரின் தந்தையான நந்தமுரி ஹரிகிருஷ்ணா தெலுங்கு தேசம் கட்சியில் முக்கியப் பொறுபில் இருந்தவராவார். ஆந்திர மாநில நெல்லூர் மாவட்டத்தில் தனது ரசிகரின் திருமணத்துக்குச் செல்ல, நந்தமுரி ஹரிகிருஷ்ணா காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தெலங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியில் கார் சென்றுகொண்டிருக்கையில், எதிர்பாராத விதமாக அவரது கார் விபத்தில் சிக்கி கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த ஹரிகிருஷ்ணா, உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் படுகாயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். நந்தமுரி ஹரிகிருஷ்ணா மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், திரைப்பட கலைஞர்களும் தங்களது ஆழந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.