மலையாளம், தமிழ், கன்னடா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த மலையாள நடிகரான கசான் கான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தகவல் சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளாவை பூர்வீகமாக கசான் கான், தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர். 1992 ஆம் ஆண்டு வெளிவந்த செந்தமிழ்பாட்டு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
தொடர்ந்து மலையாள சினிமாவிலும் நடிகராக வலம்வந்தார். பெரும்பாலும் இவர் வில்லன் வேடம் ஏற்று நடித்த வந்தார். சேதுபதி ஐபிஎஸ், மேட்டுக்குடி, வானத்தைப் போல, வல்லரசு, முறைமாமன் என பல படங்களில் இவர் நடித்துள்ளார்.1993ல் வெளியான கந்தர்வம் படத்தின் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமான இவர், வர்ணபகிட்டு, தி கிங், தி டான், மாயாமோகினி, ராஜாதிராஜா, மரியாதா ராமன், லைலா ஓ லைலா உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் விஜய்யுடன் பத்ரி, பிரியமானவளே படங்களில் நடித்துள்ளார். இதில் ‘பிரியமானவளே’ படத்தில் சிம்ரன் மீது ஆசைப்படும் முறை மாமாவாக நடித்திருந்த கசான் கான், 7 டைம்ஸ் 7 டைம்ஸ் என ஆம்ஸை உயர்த்தி காட்டும் காட்சி மிக பிரபலம். இவர் கடைசியாக மலையாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாக ‘லைலா ஓ லைலா’ படத்தில் மட்டும் நடித்தார்.
அதன் பின்னர் சினிமாவை விட்டு விலகி கசான் கான் பிசினஸில் ஆர்வம் செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையை சார்ந்த பலரும் கசான் கான் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.