Hit 3 பட ப்ரொமோஷனின் போது தென்னிந்திய படங்கள், பாலிவுட் சினிமா குறித்து நானி கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நானி. இவர் தமிழில் நான் ஈ மற்றும் ஆஹா கல்யாணம் போன்ற சில படங்களில் தான் நடித்து இருந்தார். இந்த படங்கள் எல்லாம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
இருந்தாலும், இவர் அதிகம் தெலுங்கு மொழி படங்களில் தான் நடித்து இருக்கிறார்.
மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அந்த வகையில் சமீபத்தில் இவர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் வெளியாகி இருந்த சரிபோதா சனிவாரம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை டிவிவி தனய்யா தயாரித்திருந்தார். இந்த படத்தில் நானி உடன் பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, அதிதி பாலன், சாய்குமார், சுபலேகா சுதாகர் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.
ஹிட் 3:
இதைத் தொடர்ந்து நானி அவர்கள் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது நான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஹிட்: தேர்ட் கேஸ் (HIT: Third Case). இந்த படத்தை சைலேஷ் கொலனு என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி நடித்து இருக்கிறார். இந்த படம் மே 1ஆம் தேதி திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது.
நானி பேட்டி:
தற்போது இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்று இருந்தது. இதில் கலந்துகொண்ட நானி, தமிழ் ஆடியன்ஸ் பற்றி பேசி இருந்தார். இந்நிலையில் ஹிட் 3 பட பிரமோஷனில் கலந்து கொண்ட நானி இடம் தென்னிந்திய, பாலிவூட் படங்கள் பற்றி கேள்வி கேட்டு இருந்தார்கள். அதற்கு நானி, டப்பிங் செய்யப்படும் தென்னிந்திய படங்கள் தான் பாலிவுட்டை காப்பாற்றுகின்றது என்று சொல்வது தவறான வார்த்தை என்று நான் நினைக்கிறேன்.
பாலிவுட் சினிமா:
இதை சமநிலைப்படுத்துவது என்பதுதான் சரியான வார்த்தையாக இருக்கும். சில நேரங்களில் தெலுங்கில் கூட இந்த மாதிரி ஒரு மந்தநிலை வரும். மூன்று, நான்கு மாதங்களுக்கு படங்கள் ஓடாமல் இருக்கும். கடந்த விடுமுறையில் கூட இதன் காரணமாக தியேட்டர்களை மூடி இருந்தோம். பெரிய சீசனில் எந்த படமும் ஓடவில்லை. ஆனால், எந்த நேரத்திலும் இரட்டிப்பு சக்தியுடன் திரும்பி வருகிறோம். இது இந்தியிலுமே நடக்கும். இப்போது நல்ல விஷயம் என்னவென்றால், மொழி எதுவாக இருந்தாலும் எல்லோரும் ஒரு நல்ல படத்தை விரும்புகிறார்கள்.
பாலிவுட் சினிமா பற்றி சொன்னது:
எல்லோரும் ஒரு சிறந்த படத்தை விரும்புகிறார்கள். இது தான் நம்மை சிறந்த படங்களை உருவாக்க தூண்டுகிறது. இந்தி சினிமா நாம் பார்த்து வளர்ந்த சில சிறந்த படங்களை உருவாக்கி இருக்கிறது. சில நேரங்களில் இந்த மாதிரியான வறட்சி தேவைதான். காரணம், இந்த நேரம் உங்களை நிறுத்தி சரி பார்க்க உதவும். ஆகையால் இந்தி சினிமா மீண்டும் பெரிய அளவில் கம்பேக் கொடுக்கும் என்று கூறியிருக்கிறார்