கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவரை ரசிகர்கள் எல்லோரும் பவர்ஸ்டார் என்று தான் செல்லமாக அழைப்பார்கள். தமிழ் சினிமாவில் விஜய் எப்படியோ, அதே போல் கன்னட சினிமா உலகில் மிகப் பிரபலமானவர் புனித் ராஜ்குமார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படையே உள்ளது. இவர் நடிகர் மட்டுமில்லாமல் பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகங்களில் பணிபுரிந்து வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது.
நடிகர் புனித் ராஜ்குமார் தன்னுடைய பத்தாவது வயதிலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவர். என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு தேசிய விருது உட்பட நான்கு மாநில விருது 5 ஃபிலிம்ஃபேர் விருது 4 சைமா விருது 2 சவுத் ஸ்கொப் விருது என்று பல்வேறு விருதுகளை பெற்று இருக்கிறார் நடிகர் புனித் ராஜ்குமார். அதேபோல வெறும் நடிகராக மட்டும் அல்லாமல் இவர் பல்வேறு படங்களில் பாடியும் இருக்கிறார். தான் பாடும் பாடல்கள் மூலம் வரும் பணத்தை தன்னுடைய தொண்டு நிறுவனங்களுக்கு பயன்படுத்திக் கொள்வார்.
வெறும் நடிகராக மட்டுமல்லாமல் இவர் 15 பள்ளிகளை நடத்தி அதில் அனைவருக்கும் இலவச கல்வியை கொடுத்திருக்கிறார் அதேபோல 16 முதியோர் இல்லங்கள் இவர் நடத்தி வந்துள்ளார். இவர் நடத்தி வந்த பள்ளிகளில் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்துள்ளனர். இப்படி வாழ்ந்த போது பல உதவிகளை செய்து வந்த இவர், இறந்த பின்னரும் தன் கண்ணை தானமாக வழங்கி இருக்கிறார்.
நடிகர் புனித் ராஜ்குமாரின் கண்கள் பெங்களூருவில் உள்ள நாராயண நேத்ராலயா கண் வங்கியில் சேமிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவருடைய கண்கள் தேவைப்படும் நபருக்கு வழங்கப்படும் என மருத்துவமனை அறிவித்துள்ளது. மேலும் கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.