தமிழில் பல்வேறு சீரியல்களிலும் திரைப்படங்களில் நடித்த ராஜசேகர் இன்று உடல்நலக்குறைவால் காலமாகி உள்ளது தமிழ் திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அறுபது வயது மதிக்கத்தக்க நடிகர் ராஜசேகர் சென்னை வளசரவாக்கத்தில் வசித்துவந்தார். இவர் தமிழில் பல்வேறு தொடர்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1960 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் நிழல்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது பாரதிராஜாதான்.அதன் பின்னர் தமிழில் பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார்.
தமிழில் உறவுகள் சங்கமம் செல்லமடி நீ எனக்கு போன்ற பல்வேறு தொடர்களில் நடித்துள்ளார் நடிகர் ராஜசேகர். மேலும் இவர் விஜய் நடித்த தமிழன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இறுதியாக ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சத்யா தொடரில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ராஜசேகர்.
மேலும், தமிழில் பிரபல சீரியல் நடிகைகளான ரித்திகா, யுவராணி, ரட்சிதா போன்ற பல்வேறு சீரியல் நடிகைகளுடன் நடித்துள்ளார். அதே போல விஜய் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு தொடர்களில் நடித்துள்ளார் ராஜசேகர்.
ராஜசேகரின் இந்த மறைவிற்கு தமிழ் சினிமா பிரபலங்களும், சின்னத் திரை பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ராஜ சேகரின் இறுதி சடங்கு இன்று அல்லது நாளை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.