`பூவே பூச்சூடவா’ சீரியலைத் தொடர்ந்து பார்த்து வருகிறவர்கள், அதில் வில்லத்தனங்களை அரங்கேற்றி வரும் யுவராணியைக்கூட மன்னித்துவிடுகிறார்கள். ஆனால், யுவராணிக்குத் தூபம் போட்டுக்கொண்டே இருக்கும் அவரின் அம்மா கௌசல்யாவை மன்னிக்கத் தயாராய் இல்லை.
`கிழவிக்கு இந்த வயசுல வில்லத்தனத்தைப் பாருங்கய்யா’ எனத் திட்டித் தீர்க்கிறார்கள். 72 வயதிலும் சுறுசுறுப்பாக நடித்துக்கொண்டு, மக்களிடம் திட்டும் வாங்கிக்கொண்டிருக்கிற கௌசல்யா யார் என்பது அந்த சீரியலில் உடன் நடிக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் சிலருக்கே தெரியவில்லை.
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசனுடன் மேடை நாடகங்கள், ரஜினி, கமலுடன் அதிகளவில் படங்கள்… என ஒரு காலத்தில் பரபரப்பான நடிகராக இருந்து மறைந்த நடிகர் செந்தாமரையின் மனைவிதான் இந்தக் கௌசல்யா.
நான் எம்.ஜி.ஆர், நாடக மன்றத்துல இருக்க, அவர் சிவாஜி நாடகக் கம்பெனியில இருந்தார். ‘சுமைதாங்கி’னு ஒரு நாடகம். அதுல நாங்க ரெண்டுபேரும் அண்ணன் தங்கையா நடிச்சோம். ஆனா, அவரை எனக்கு சுத்தமாப் பிடிக்காது.
முரட்டுத்தனமா ‘என்ன’னு அவர் கேட்டா, ‘ம்ம்… விளக்கெண்ணெ’னு நானும் பதிலுக்கு முறைப்பேன். எங்களுக்குள்ள மோதலாவே போயிட்டிருந்ததைக் `காதல்’னு கண்டுபிடிச்சு கல்யாணம் செஞ்சு வெச்சிட்டாங்க, ஆர்.ஆர்.லலிதா. கல்யாணத்துக்குப் பிறகும்கூட எங்களுக்குள்ள முட்டல் மோதல் நீடிச்சது.
கடைசியில சாகுறப்போகூட அந்த உயிர் நடிச்சபடியேதான் போச்சு. 29 வருடம் அவரோட வாழ்ந்தேன். சாகுறப்போ வீடு, தோட்டம்னு எல்லாமே அவர் சேர்த்து வெச்சுட்டுதான் போனார். ஆனா, எதுவுமே எனக்குக் கிடைக்கலை; இதுதான் நிஜம். இதை நான் என்னனு வெளியில சொல்ல… `நடிகர் செந்தாமரை பொண்டாட்டியை ரோட்டுல விட்டுட்டுப் போயிட்டார்’னு அவருக்கு அவப்பெயர் கிடைக்கிறதை நான் விரும்பலை. அதேசமயம் புள்ளைங்க கைவிட்டுட்டாங்கனு என் வாயால சொல்ல விரும்பலை. உடம்புலேயும் மனசுலேயும் தெம்பு இருக்கிற வரை உழைச்சுச் சாப்பிடலாமேனுதான், இப்போ சீரியல்ல நடிக்க வந்துட்டேன்.