நேற்று (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தான் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்தியா கிரிக்கெட் அணியின் கேப்டன் கூல் என்ற பட்டப் பெயருடன் திகழ்ந்து வந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி, இந்திய கிரிக்கெட் அணியை உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளுக்கும், எண்ணற்ற வெற்றிகளுக்கும் வழி நடத்தியவர்.
ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்த நிலையில் தற்போது அணைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்தும் ஓய்வை அறிவித்திருந்தார். தோனியின் இந்த திடீர் அறிவிப்பு அவரது எண்ணற்ற ரசிகர்களுக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.இதனால் ரசிகர்கள் சமூக வளைத்தளத்தில் #ThankyouMsd என்ற ஹேஷ் டேக்கை கூட ட்ரெண்ட் செய்தனர்.
தோனியை போலவே நேற்று சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார். இருப்பினும் தோனியின் ஒய்வு அறிவிப்பு தான் பலராலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அரசியல் பிரபலங்கள் துவங்கி சினிமா நடிகர்கள் வரை பலரும் தோனி மற்றும் ரைனாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தோனியின் ஒய்வு குறித்து கேப்டன் விஜயகாந்த் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தோனி அவர்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டும், ஊக்கப்படுத்தும் விதமாக, பயிற்சி அகாடமி உருவாக்க வேண்டும். தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பணியாற்றியதையும் தமிழக மக்கள் என்றும் நினைவில் கொள்வார்கள் “Captain Dhoni – A Cool and Great Captain” என்று பதிவிட்டுள்ளார் நம்ம கேப்டன் விஜயகாந்த்.