நடிகர் விக்ரமின் மகன் துருவ் இருந்த கார் ஆட்டோக்கள் மீது மோதியதில் 3 ஆட்டோக்கள் பலத்த சேதமடைந்துள்ளன. நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். தெலுங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றியடைந்த படமான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாக துருவ் தற்போது நடித்து வருகிறார். இயக்குநர் பாலா இயக்கத்தில் இந்தப் படத்தின் 50 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. மீதி காட்சிகள் சென்னையின் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் துருவ் மற்றும் மூன்று நண்பர்கள் இன்று அதிகாலை காரில் சென்றுகொண்டிருந்த போது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காவல் ஆணையர் விஸ்வநாதன் வீட்டின் முன்பு விபத்து ஏற்படுத்தினர். இந்த விபத்தில் மூன்று ஆட்டோக்கள் சேதமடைந்ததாகவும் ஒரு ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
விபத்து ஏற்படுத்தியவுடன் போலீஸார் காரில் வந்தவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர். அப்போது துருவ் மற்றும் அவரது நண்பர்கள் தப்பி ஓடியுள்ளனர். மூன்று நண்பரில் ஒருவர் மட்டும் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து துருவ் விக்ரமை விசாரணைக்காக அழைத்துச் சென்ற பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் அவரிடம் விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.