பண மோசடியில் ஈடுபட்டதாக, சின்னத்திரை நடிகையும் தொகுப்பாளினியுமான அனிஷாவை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியும் சின்னத்திரை நடிகையாக இருப்பவர் அனிஷா. அவரின் கணவருடன் இணைந்து, ‘sky equipment’ என்ற பெயரில் மின்சாதனப் பொருள்கள் விற்பனைசெய்யும் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். இந்நிலையில், கே.கே. நகரைச் சேர்ந்த பிரசாந்த் குமார், அனிஷா மற்றும் அவரது கணவர் மீதும் போலீஸில் புகார் ஒன்றைப் பதிவுசெய்துள்ளார். அதில், எனது நிறுவனத்தில் இருந்து ரூ.37 லட்சம் மதிப்பிலான 101 ஏ.சி-களை அனிஷா மற்றும் அவரது கணவர் சேர்ந்து வாங்கினர்.
இதற்கு உண்டான பணத்தை காசோலையாகத் தந்தனர். ஆனால் அந்த காசோலை, வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. அதன் பின்னர், பணத்தை தரச்சொல்லி அவர்களிடம் கேட்டும், அவர்கள் தரவில்லை. மாறாக, பணம் தர முடியாது என இருவரும் மிரட்டினர்” எனப் புகார் அளித்திருந்தார்.
இப்புகார் குறித்து விசாரணை நடத்திய போலீஸார், புகாரில் உண்மைத் தன்மை உள்ளதை அறிந்து, இருவர் மீதும் வழக்குப் பதிந்தனர். இந்நிலையில், தொகுப்பாளினி அனிஷா மற்றும் அவரது சகோதரரை போலீஸார் இன்று கைதுசெய்தனர். அவர்களிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். ஆனால், அவரது கணவர் சக்திமுருகன் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக அனிஷா, `ஸ்கை டிராவல்ஸ்’ என்ற பெயரில் சொகுசு கார்களை வாடகைக்கு விடும் தொழில் செய்துவந்துள்ளார். இதற்காக, சொகுசு கார்களைக் கொடுத்த உரிமையாளர்களுக்குத் தெரியாமல், அதன் ஆவணங்களை அடகுவைத்து, லட்சக்கணக்கில் பண மோசடி செய்துள்ளதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதுகுறித்தும் வழக்கு பதியப்பட்டுள்ளது.