80 மற்றும் 90களில் வெளிவந்த தமிழ் படங்களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை மாதவி. ரஜினி மற்றும் கமலுடன் பெரும்பாலான படங்களில் நடித்தவர் மாதவி. இவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?
நடிகை மாதவி 1962ஆம் ஆண்டு ஹைதராபாத் நகரில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் அல்லதுர்கம் மாதவி. சிறு வயதில் நாட்டிய கலையில் கைதேர்ந்தவர் இவர். கிட்டத்தட்ட 1000 மேடையில் தனது நாட்டிய திறமையை காட்டியுள்ளார். அதன் பின்னர் தனது டீன் ஏஜில் தூரப்பு படமரா என்ற ஒரு தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்தார். அந்த படம் செம்ம ஹிட் படமாக அமைந்தது. அதன் பின்னர் தனது சிறு வயதிலேயே தெலுங்கில் முன்னணி ஹீரோயின் ஆனார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் மட்டுமே 10 படங்களுக்கு மேல் நடித்தார் மாதவி.
1981ல் ரஜினிகாந்தின் தில்லு முள்ளு படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் ரஜினியுடன் கர்ஜனை, தம்பிக்கு எந்த ஊரு, உன் கண்ணில் நீர் வழிந்தால், விடுதலை ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தார். ஹிந்தியில் அமிதாப் பச்சனுடனும் நடித்துள்ளார். கமலுடன், ராஜ பார்வை, காக்கி சட்டை, மங்கம்மா சபதம் ஆகிய படங்களில் நடித்து அசத்தினார் மாதவி. மார்க்கெட் எகிற எகிற தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ,கன்னடம் ,ஒரியா என அனைத்து மொழிகளிலும் 300 படங்களுக்கு மேல் நடித்தார் மாதவி.
இவரது நடிப்பிற்காக கேரளா ஸ்டேட் பிலிம்பேர் விருதினை பெற்றுள்ளார். ஸ்வாமி ராம் என்னும் ஹிந்து மத ஆன்மீக சாமியார் ஒருவரின் போதனைகளை எப்போதும் விடாமல் கேட்பவர் மாதவி.
அவரது ஆசிரமத்திற்கு அடிக்கடி செல்வார் மாதவி. 1995ல் ஸ்வாமி ராம் கூறியதன் பேரில் ரால்ப் சர்மா என்னும் ஒரு மருத்துவ மருந்துகள் தயாரிக்கும் தொழில் அதிபரை 1995ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ரால்ப் சர்மா ஒரு ஆங்கிலோ இந்தியன் ஆவார். திருமணத்திற்கு பிறகு தனது நடிப்பினை முற்றிலுமாக நிறுத்திவிட்டார் மாதவி.
இந்த தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளது. தற்போது அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் மாதவி.