தனது தம்பியின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து நடிகை ரம்யா பாண்டியன் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் முதன் முதலில் சினிமா திரை உலகில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ‘டம்மி டப்பாசு’ என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். பின் இவர் ராஜி முருகன் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘ஜோக்கர்’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் சமூக பிரச்சனைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
இந்தப் படத்தில் ரம்யா பாண்டியன் அவர்கள் கிராமத்து பெண்ணாக வலம் வந்து இருந்தார். அது மட்டும் இல்லாமல் நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய நடிப்புத் திறனால் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்தார். அதற்குப் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. பின் இவர் நடத்திய போட்டோ சூட் மூலம் இளசுகள் மத்தியில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். அதன்பின் தான் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது.
ரம்யா பாண்டியன் குறித்த தகவல்:
அதனைத் தொடர்ந்து, இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். பின், இவர் ‘பிக் பாஸ் சீசன் 4’ நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவரது பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆனது, அதையெல்லாம் சமாளித்து மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது இவர் தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளத்திலும் கவனம் செலுத்து வருகிறார். இதற்கிடையில் ரம்யா பாண்டியன் கடந்த ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் யோகா பயிற்சி பெற்றார்.
ரம்யா பாண்டியன் திருமணம்:
அப்போது அங்கு பயிற்சியாளராக பணியாற்றி வரும் லோவல் தவானுக்கும் ரம்யா பாண்டியனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரிஷிகேஷில் உள்ள கங்கை நதி கரையில் அமைந்துள்ள கோவிலில் எளிமையாக திருமணம் நடந்து முடிந்தது. பின், இவர்களுக்கு சென்னையில் பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். ரம்யா பாண்டியனுக்கு திருமணம் ஆகி 3 மாதங்களே ஆன நிலையில், அவரின் சகோதரர் பரசு பாண்டியனுக்கும் திருமண நடந்தது.
ரம்யா பாண்டியன் தம்பி திருமணம்:
ரம்யா பாண்டியன் தம்பி பரசு பாண்டியன் சிங்கப்பூரில் டிசைனராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது சென்னையில் இருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்தில் அருண் பாண்டியரின் குடும்பம் மற்றும் குடும்பத்தினர் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக ரம்யா பாண்டியன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், என்னுடைய தம்பி பரசு பாண்டியனுக்கு திருமணம் நடந்து முடிந்தது. ஆனால், அவன் எப்பொழுதுமே எனக்கு ஆறடி உயர குழந்தையாக தான் இருக்கிறான். நான் எவ்வளவு மகிழ்ச்சியோடு இருக்கிறேன் என்று வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை.
ரம்யா பாண்டியன் பதிவு:
அவனுடைய ஒவ்வொரு அடியிலும் எங்களை பெருமைப்பட வைத்திருக்கிறான். இப்போது உயர்ந்த மதிப்புள்ள மனிதனாக வளர்ந்திருக்கிறார். அவனுடைய அழகான மனதிற்கு கடவுள் மிக சிறந்த வாழ்க்கை துணையாக அன்பான ஐஸ்வர்யாவை பரிசாக கொடுத்துக்கிறார். என் ரத்தினத்திற்கு ஒரு தேவதை கிடைத்ததில் எங்களுடைய குடும்பம் ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. ஐஸ்வர்யா, நாங்கள் உன்னை ரொம்பவே நேசிக்கிறோம். உன் குடும்பத்தை இன்னும் அதிகமாக நேசிக்கிறோம். ஒரு பெரிய குடும்பமாக சேர்ந்து முடிவற்ற மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்க காத்திருக்கிறோம். மனம் நிறைவாக இருக்கிறது. என் அன்பானவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அன்பு மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார்.