உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.’கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. கொரோனா நிவாரண பணிகளுக்காக பல முன்னணி நடிகர்கள் நிதியுதவி கொடுத்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் நடன இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ்.
அவரும் கொரோனா நிவாரண பணிகளுக்காக நிதியுதவி வழங்கியிருந்தார். அதுமட்டுமின்றி, இந்த ‘கொரோனா’ லாக் டவுன் டைமில் பொருளாதார ரீதியில் ரொம்பவும் கஷ்டப்பட்டு வரும் பலருக்கும் தன்னால் முடிந்த அளவிற்கு நிதியுதவி அளித்து வருகிறார். ராகவா லாரன்ஸ் போலவே அவர் இயக்கி வரும் படத்தின் ஹீரோவும் இந்த லாக் டவுன் டைமில் நிதியுதவியை அள்ளி கொடுத்து வந்த வண்ணமிருக்கிறார்.
அவர் தான் ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் அக்ஷய் குமார். ‘லக்ஷ்மி பாம்’ என்ற திரைப்படத்தில் அக்ஷய் குமார் கதையின் நாயகனாக நடித்து கொண்டிருக்கிறார். அப்படத்தினை இயக்குநர் ராகவா லாரன்ஸ் தான் இயக்கி கொண்டிருக்கிறார். இது ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து சூப்பர் ஹிட்டான ‘காஞ்சனா’ என்ற தமிழ் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், மும்பையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை அதிகாரிகள் சந்திரகாந்த் பெந்துர்கர் மற்றும் சந்திப் சர்வே ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரழந்தனர். தற்போது, மும்பை போலீஸ் ஃபவுண்டேஷனுக்கு ரூ.2 கோடி பணத்தை நிதியுதவியாக கொடுத்திருக்கிறார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் ஒரு ஸ்டேட்டஸும் போட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து மும்பை போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அக்ஷய் குமாருக்கு நன்றி தெரிவித்து ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார்.