‘சிந்து சமவெளி’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தார் நடிகை அமலா பால். ‘சிந்து சமவெளி’ படத்துக்கு பிறகு ‘மைனா, தெய்வத் திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி , பசங்க 2, அம்மா கணக்கு, திருட்டுப் பயலே 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சசன், ஆடை’ என அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடித்தார் நடிகை அமலா பால்.மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை அமலா பால், அடுத்ததாக தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகிலும் நுழையலாம் என முடிவெடுத்தார்.
தெலுங்கில் ‘நாயக், பெஜவாடா’ மற்றும் கன்னடத்தில் ‘ஹெப்புலி’ போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார் நடிகை அமலா பால். 2014-ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலா பால். அதன் பிறகு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார். சமீபத்தில், மும்பையைச் சேர்ந்த பாடகர் பாவ்னிந்தர் சிங்கை, நடிகை அமலா பால் திருமணம் செய்து கொண்டதாக ஒரு செய்தி பரவியது. இதற்கு காரணம் பாடகர் பாவ்னிந்தர் சிங் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டு நீக்கியது தான்.
இது தொடர்பாக அமலா பால் பேசுகையில் “நான் அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். எனது திருமணம் குறித்த அறிவிப்பை நானே விரைவில் தெரிவிப்பேன்” என்று கூறியிருந்தார். தற்போது, அமலா பால் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். அந்த பதிவில் “ஓஷோ எழுதிய ‘தி புக் ஆஃப் வுமன்’ என்ற புத்தகத்தில் இடம்பெறும் சிறந்த கேள்விகள் அனைத்துமே பெண்களால் தான் கேட்கப்படுகின்றது” என்று குறிப்பிட்டு அதன் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.
அதில், காதல், திருமணம், குழந்தைகள் பற்றிய எல்லா கேள்விகளும் பெண்களை மட்டுமே கேட்கப்படுகின்றன. ஆண்களை பார்த்து, இந்த கேள்விகளை யாரும் கேட்பது இல்லை. பெண் அடிமைத்தனத்திலும், அவமானத்திலும் இருக்கிறாள். பொருளாதாரத்திலும் மற்றவர்களை சார்ந்து இருக்கிறாள். அவளை குழந்தை பெற்றுக் கொடுப்பவளாகவும் பார்க்கின்றனர். அவளுக்குள் வளரும் குழந்தை, அவளை சாப்பிட கூட அனுமதிப்பது இல்லை
வயிற்றில் குழந்தை ஒன்பது மாதம் வளர்ந்ததும் அதை பெற்று எடுப்பது என்பது மரணம் போன்றே இருக்கும். அவள் ஒருமுறை கர்ப்பமாகி அதில் இருந்து மீள முடியாது. மீண்டும் அவர்களை கர்ப்பமாக்க அவளது கணவன் தயாராக இருக்கிறான். ஒரு பெண் மக்கள் கூட்டத்தை பெருக்கும் தொழிற்சாலை போன்றே இருக்கிறாள். ஆண்களை பொறுத்தவரை பெண்களை பாலுணர்வை பூர்த்தி செய்யும் ஒரு பொருளாகவே பயன்படுத்துகின்றனர்.
பெண்ணை உண்மையாக நேசித்து இருந்தால் உலகில் மக்கள் தொகை அதிகரித்து இருக்காது. அவன் சொல்லும் காதல் என்ற வார்த்தை போலி. பெண்ணை ஒரு வளர்ப்பு பிராணியாகவே அவன் நடத்துகிறான் என்று குறிப்பிட்டிருந்தார். அமலா பாலின் இந்த கருத்திற்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், ஆண்கள் குறித்த அமலா பாலின் பார்வை சரியானது இல்லை என்று ஆண்கள் கமன்ட் செய்து வருகின்றனர். ஏன் ஒரு சில பெண்களும் அமலா பாலின் இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.