90 காலகட்டத்தில் இளசுகளின் ஃபேவரட் விஜேவாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்வர்ணமால்யா. சன் டிவியில் ஒளிபரப்பான பெப்சி உங்கள் சாய்ஸ், நீங்கள் கேட்ட பாடல் போன்ற பல நிகழ்ச்சிகளை தற்போது வரை யாராலும் மறக்கமுடியாது. அதே போன்று தான் இளமை புதுமை என்ற நிகழ்ச்சி மூலம் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஸ்வர்ணமால்யா. இவர் 1981 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். சிறு வயது முதலே பரதத்தில் அதிக ஆர்வம் உடையவர். தனது 3 வயது முதல் பரதம் கற்று வருகிறார் ஸ்வர்ணமால்யா.
இவர் 17 வயதில் பாரதத்திற்கான யுவ கலா பாரதி என்ற விருதினை பெற்றவர். பின்னர் தான் சன் டிவியில் ஒளிபரப்பான இளமை புதுமை என்ற நிகழ்ச்சி மூலம் தனது கலை பயணத்தை தொடங்கினார். அதற்கு பிறகு பல டீவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். அதன் பின் இவர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து இவர் எங்கள் அண்ணா, மொழி,வெள்ளித்திரை போன்ற படங்களில் நடித்தார். பின் சில ஆண்டுகள் இவர் படங்களில் நடிக்காமல் பிரேக் எடுத்து கொண்டார். அதன் பின்னர் பாரதி ராஜா இயக்கிய தேக்கத்தி பொண்ணு, சன் டிவி யில் ஒளிபரப்பான தங்கம் போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது இவர் சினிமா துறையை விட்டு முழுவதும் ஒதுங்கி உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் இவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் ரசிகர்கள் அலைபாயுதே, மொழி மாதிரி நல்ல படங்களில் நடித்து இருக்கிறீர்கள். ஆனால், அதற்குப் பிறகு சின்னத்திரை, பெரியதிரை என எதிலுமே உங்களை பார்க்க முடியலை. அதற்கான காரணத்தை கூறுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு ஸ்வர்ணமால்யா அவர்கள் கூறியது,
நான் நடனத்தில் பிஎச்டி முடிச்சுட்டு இப்போது பேராசிரியராக இருக்கிறேன். நடனத்திலேயே என்னுடைய கவனம் முழுவதும் சென்று விட்டது. அதற்காகவே என்னுடைய நேரமும் செலவாகிவிட்டது. அதுமட்டுமில்லாமல் வயது ஆக ஆக நம்முடைய கவனமும் ஆர்வமும் மற்றொரு விஷயத்தில் மாறிக் கொண்டு தான் இருக்கும். அதே போல தான் என்னுடைய விருப்பமும் மாறத்தொடங்கியது. எனக்கு சின்ன வயதிலிருந்தே நடனத்தில் அதிக ஆர்வம். நடனம் என் கூடவே பிறந்தது என்று சொல்லலாம்.
அதற்கு இடையில் வந்தது தான் இந்த சினிமா, நடிப்பு எல்லாம். சினிமாவில் இருந்த போது நான் நிறைய நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டேன். மத்தபடி படங்கள் பண்ணனும், சினிமாவிலேயே தான் இருக்கணும் என்ற கட்டாயமும் விருப்பமும் எனக்கில்லை. நல்ல கதாபாத்திரம் வரும்போது அதற்கான நேரம் அமையும்போது கண்டிப்பாக நான் மறுபடியும் நடிப்பேன் என்று கூறினார். தற்போது ஸ்வர்ணமால்யா அவர்கள் சென்னையில் ஒரு பரத நாட்டிய பள்ளியை ஆரம்பித்து பல குழந்தைகளுக்கு பரதம் கற்றுத்தந்து வருகிறார். ஸ்வர்ணமால்யா அவர்கள் பல்வேறு மேடைகளிலும் பரத நாட்டிய நிகழ்ச்சிகளில் நடனமாடி வருகிறார்.