தி கேரளா ஸ்டோரி படம் குறித்து ஏ ஆர் ரகுமான் பதிவிட்டிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தி கேரளா ஸ்டோரி. இதற்கு முன் இவர் ஆஸ்மா, தி லாஸ்ட் மாங்க் போன்ற படங்களை இயக்கியிருந்தார். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தி கேரளா ஸ்டோரி படம் மே ஐந்தாம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் இந்தியில் எடுக்கப்பட்டது. பின் இந்த படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பேன் இந்திய திரைப்படமாக வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் தான் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. அதில் 32 ஆயிரம் இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்களை ஏமாற்றி இஸ்லாமிய மதத்திற்கு மாற்றுகிறார்கள். பின் அவர்களை ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளுக்கு அழைத்து சென்று தீவிரவாத இயக்கத்தில் சேர்த்து விடுகிறார்கள். இது போன்ற காட்சி தான் டிரைலரில் காண்பிக்கப்படுகிறது. அதோடு இந்த படம் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த கதை உண்மைக்கு எதிரானது என்றும் மத வெறியை ஏற்படுத்தி மக்களுடைய நல்லிணக்கத்தை உடைக்கும் திட்டத்தோடு எடுக்கப்பட்டிருப்பதாகவும் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தி கேரளா ஸ்டோரி படம்:
அது மட்டும் இல்லாமல் இந்த படத்தை கேரளாவில் வெளியிட எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது. மேலும், இது குறித்து கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். இதனை அடுத்து இந்த விவகாரம் குறித்து கேரளா முஸ்லீம் யூத் லீக் இயக்கம் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறது. அதில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் சொல்லப்பட்டு இருப்பது உண்மை என நிறுபிப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று கூறி இருக்கிறார்கள். இப்படி இந்த படம் தொடர்பாக சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் கிளம்பி இருக்கிறது.
ஏ ஆர் ரகுமான் டீவ்ட்:
இந்நிலையில் இத்தொடர்பாக ஏ ஆர் ரகுமான் அவர்கள் தன்னுடைய டீவ்ட்டர் பக்கத்தில் கேரளா ஜமாத் ஒன்றில் இந்து முறைப்படி நடந்த திருமணம் குறித்த வீடியோவை பதிவிட்டு துணிச்சல்.. மனித குலத்தின் மீதான அன்பு நிபந்தனையற்றதாகவும், குணப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். மேலும், ஏ ஆர் ரகுமான் பதிவிட்ட வீடியோவில் கேரள மாநிலத்தில் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் அஞ்சு. இவருடைய தந்தை 2019 ஆம் ஆண்டு மாரடைப்பால் இறந்துவிட்டார். இவருடைய தாய் தன்னுடைய மூன்று மகன்கள் உடன் வசித்து வந்தார். தந்தை இறந்த பிறகு அஞ்சுவின் குடும்பம் பொருளாதார ரீதியில் ரொம்ப சிரமப்பட்டது. பல பிரச்சினைகளை சந்தித்து இருந்தது.
அஞ்சு குடும்பம்:
இந்த நிலையில் தான் தன்னுடைய மூத்த மகளான அஞ்சுவுக்கு திருமணம் செய்து வைக்க அவருடைய தாய் அதிகம் சிரமப்பட்டு இருந்தார். பின் அஞ்சினுடைய தாய் தன்னுடைய பகுதியில் உள்ள செருவாளி மசூதி முஸ்லிம் ஜமாத் கமிட்டிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் அவர் தன்னுடைய குடும்ப நிலை பற்றியும், மகளின் திருமணம் பற்றியும், திருமணத்திற்கு பண உதவி செய்ய முடியுமா என்றும் வேண்டுகோள் கேட்டிருந்தார். இதனை அறிந்த ஜமாத் கமிட்டி அஞ்சுவின் திருமண செலவை ஏற்பதாக கூறி இருக்கிறார்கள். பின் 2020 ஆம் ஆண்டு அஞ்சுவுக்கும் சரத் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
Bravo 🙌🏽 love for humanity has to be unconditional and healing ❤️🩹 https://t.co/X9xYVMxyiF
— A.R.Rahman (@arrahman) May 4, 2023
செருவாளி மசூதியில் நடந்த இந்து திருமணம்:
செருவாளி மசூதி வளாகத்தில் சிறிய மேடை அமைத்து அதில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. அது மட்டும் இல்லாமல் திருமணம் வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் உறவினருக்கு ஜமாத் கமிட்டி சார்பாக சைவ உணவு வழங்கப்பட்டிருந்தது. மேலும், அஞ்சுவுக்கு சீதனமாக 10 பவுன் தங்க நகையும், 2 லட்சம் ரூபாய் பணமும் அந்த கமிட்டி கொடுத்திருந்தார்கள். இந்த திருமணத்தில் இந்து- முஸ்லிம் என அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வாதம் செய்திருந்தார்கள். ஏழை பெண்ணுடைய திருமணத்தை நடத்தி வைத்த ஜமாத் கமிட்டிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்கள்.